பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

காற்றில் வந்த கவிதை


பட்டிமாடு பெருகவேணும்-ஆயன் பெருமாளே
பால்பானை பொங்கவேணும்-ஆயன் பெருமாளே
வாரணம்போல் வளரவேணும்-ஆயன் பெருமாளே
வாயிலெல்லாம் சந்நிதிபோல்-ஆயன் பெருமாளே
மக்கள்மனை வாழவேணும்-ஆயன் பெருமாளே
மகிமையெங்கும் வளரவேணும்-ஆயன் பெருமாளே
செய்யும் தர்மம் கூடவரும்-ஆயன் பெருமாளே
செல்வமெல்லாம் கூடவருமோ-ஆயன் பெருமாளே
திருப்பதி பகவான் அருள் கொடுப்பார்-ஆயன்
பெருமாளே
சீரும் சிறப்பும் பெருகவேணும்-ஆயன் பெருமாளே

பெருமாளே மாடு மேய்க்கும் ஆயன். ஆதலால் ஆடு, மாடு பெருக வேண்டும் என்று அவனிடத்திலே கேட்பது மிகப் பொருத்தமல்லவா?

ஆயன் பெருமாளிடம் வரங் கேட்கும் இந்தப் பாடலிலே வேறொரு பெரிய உண்மையும் பேசப்படுகிறது. பிச்சை கேட்க வருகிறவன் புத்திசாலிதான். ஆதலால் அவன் இந்த உண்மையையும் இடையிலே நினைவூட்ட விரும்புகிறான். அதனால் அவனுக்கும் லாபம்: கேட்கிறவனுக்கும் லாபம்.

வாழ்க்கை முடிவடைகின்ற காலத்திலே செல்வமெல்லாம் கூட வராது: ஒருவன் செய்த தர்மங்களே அவனுக்குத் துணையாக வரும். ஆதலால் வாழ்க்கை வசதியிருக்கும்போதே தருமம் செய்து கடைவழிக்கு நல்ல பலமான துணை தேடி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த உண்மையை ஆயன் பெருமாள் பாட்டுக்காரன் எடுத்து ஓதுகிறான். இதை அவன் உபதேசம் செய்வதுபோலச் சொல்ல வில்லை. ஆயன் பெருமாளிடம் வரம் கேட்கும் அதே பாங்கில் இதையும் கூறிவிடுகிறான். அவன் கெட்டிக்காரன் என்பதில் ஐயமில்லை.