உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

49


தலைவியின் இல்லத்தே தாய் தெய்வத்தை வழிபட்டுத் தன் மகளின் மனமாற்றத்தைத் தீர்க்குமாறு வேண்டுதற்கு ஏற்பாடு செய்ய, மகள், அதனை விலக்குமாறு இங்ஙனம் கூறினாளாகக் கொள்க.

வல்லினப் பாட்டு

"முற்றவும் வல்லின எழுத்துகள் அமையும்படியாக ஒரு செய்யுள் செய்க" என்று ஒருவர் கேட்கப் பாடியது இது.


துடித்துத் தடித்துத் துடுப்பெடுத்த கோடற்
றொடுத்த தொடைகடுக்கை பொற்போற்-பொடித்துத்
தொடைபடைத்த தோடுடித்த தோகைகூத் தாடக்
கடிபடைத்துக் காட்டித்துக் காடு. (73)

கோடல் துடித்துத் தடித்துத் துடுப்பு எடுத்த - காந்தள் முகிழ்த்தனவாய் ஒளிகொண்டவாய் அரும்புகளை எடுத்தன; கடுக்கை பொற்போல் தொடை தொடுத்த - கொன்றைகள் பொன் போன்று ஒளிறும் மாலைகளைத் தொங்கவிட்டன; தொடை படைத்த தோபொடித்துத் துடித்த - வளைகளை அணிந்தவையான தோள்கள் சிலிர்த்துத் துடிதுடிப்பவை ஆயின; தோகை கூத்தாட - மயிலினம் கூத்து ஆடத் தொடங்கின; காடு கடிபடைத்துக் காட்டிற்று - இப்படியாக காடே தனக்கொரு மணத்தினைப் படைத்துக் கொண்டதாகத் தன்னைக் காட்ட லாயிற்று.

கார் காலம் தொடங்கிற்று என்பதனால் ஏற்படும் நிகழ்ச்சிகள் இவை எல்லாம். 'தோகை கூத்தாட' என்பதனுள் 'கூத்தாடின' என்பது கூத்தாட எனத் தொக்கி நின்றது.

மெல்லினப் பாட்டு

முற்றவும் மெல்லின எழுத்துக்களால் அமைந்தது இச்செய்யுள். அங்ஙனம் பாடுமாறு ஒருவர் கேட்கக் கவிஞர் பாடியது இது.


மானமே நண்ணா மனமென் மனமென்னும்
மானமான் மன்னா நனிநாணும் - மீனமா
மானா மினன்மின்னிமுன் முன்னே நண்ணினு
மானா மணிமேனி மான். (74)

மானமே நண்ணா மனம் என் - மானம் உடைய தமையினையே விரும்பாத மனத்தின் இயல்புதான் என்னே? ஆனா மணி மேனி மான் - ஒப்பற்ற செம்மணி போன்ற திருமேனியினை உடையாளான மான்போன்ற ஒரு நங்கை, ஆனா மினல் மின்னி முன் முன்னே நண்ணினும்-தன் அணிகளால் நீங்காத முன்னொளி-