76
காளமேகப் புலவர் தனிப்பாடல்கள்
கிழக் கொல்லன்
திருவாரூர்த் தியாகேசரைச் சென்று பணிந்தபோது அவரை வியந்து மனமுருகிப் பாடியது இது.
தென்னொக்குஞ் சோலைக் கமலைப்
பிரான்செஞ் சடாடவி தான்
என்னொக்கு மென்னி லெரியொக்கு
மந்த வெரியி லிட்ட
பொன்னொக்கும் கொன்றை கரியொக்கும்
வண்டுநற் பொற்பணி செய்
மின்னொக்குங் கங்கைகிழக் கொல்ல
னொக்குமவ் வெண்பிறை யே.
(114)
'அழகு குடியிருப்பது போன்ற வளமான சோலைகளையுடைய திருவாரூரிலே கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானின் செஞ்சடைக் காடுதான் எதனைப் போன்றதோ' என்று கேட்டால் அது எரியும் நெருப்பினைப் போன்றதாகும் எனலாம். அச் சடையின் மேல்விளங்கும் கொன்றை மலர்களோ என்றால், நெருப்பினில் இட்ட பொன்னைப் போன்றதாக விளங்கும்; அக் கொன்றை மலர்களிடத்தே விளங்கும் வண்டுகளோ கரித்துண்டுகளைப் போன்று விளங்கும். அங்கே விளங்கும் கங்கையோ வென்றால், நல்ல பொன்னின் நடுவே வயிரத் துண்டுகளை இணைத்துப் பணிசெய்தார் போன்றதாக மின்னொளி பரப்பி விளங்கும். அவ்விடத்தே விளங்கும் வெண் பிறையோ வென்றால், அந்தப் பொற்பணியினைச் செய்து கொண்டிருக்கிற ஒரு கிழட்டுப் பொற்கொல்லனைப் போலத் தோன்றும்.
சிவபெருமானின் சடைமுடியிலே, இப்படி ஒரு பொற்பணி செய்யும் தொழிற் காட்சியையே உருவாக்கி இன்புறுகின்றார் கவிஞர்.
சந்து போனால்
'பெருமான்; ஏனப்பா இப்படி ஆடுகின்றார்?' திருவாரூர்த் தியாகராசப் பெருமானைத் தொழுது நின்ற காளமேகத்தை ஒருவர் கேட்டு விடுகிறார். "ஒரு பெண்ணினிடத்தில் ஒரு முறை அல்லாமல் இருமுறையும் தூதுபோய் வந்தவாராயிற்றே? அந்தக் களைப்புதான் சரியாக நிற்க முடியாமல் கால் ஆட்டங் கண்டிருக்கிறது போலும்!" என்று, அவருக்கு சொல்லுகிறார் கவிஞர்.
திருந்தா டாவணியுந் தென்கமலை ஈசர்
இருந்தாடா தென்செய் திடுதார்-பொருந்த
ஒருகாலே யல்லவே யொண்டடிக் காவன்
றிருகாலும் சந்துபோ னால்.
(115)