திருக்குறள் ☆ 155
வினைகள்
உயிர்கள் தொழிற்படும் திறத்தன. உயிர்கள் தொழிற்படுதல் இயற்கை. உலக இயக்கமே தொழிற்படுதலில்தான் அமைந்து கிடக்கிறது. உயிர், உயிர்ப்போடு உள்ளமைக்கு அதன் தொழிற்பாடே அடையாளம். உயிர் தொழிற்படாது சோம்பிக்கிடத்தல், பிறப்பின் நோக்கத்திற்கு முரண்; உலக இயக்கத்திற்கு மாறுபட்டது; இயற்கைக்கு இசைவில்லாதது. இம்மையில் துன்பத்தைத் தந்து மறுமை இன்பத்தையும் இழக்கச் செய்வது சோம்பிக்கிடத்தல். ஆதலால், ஓயாது தொழிற்படுதல் உயிர் செய்தற்குரிய தவமாகும். தொழிற் படுதலை வினைசெய்தல் என்று தமிழ்மரபு கூறும். வினை செய்தல் நன்மையும் தரும்; தீமையும் தரும். நன்மையும் தீமையும் செய்யும் வினைகளிலா? வினை செய்யும் நோக்கங்களிலா? வினை செய்தலின் பயனை, அது நன்றாயினும் தீதாயினும் அவரவர்களே அடைந்து அனுபவித்தல் வேண்டும் என்பது வள்ளுவத்தின் கோட்பாடு. இந்த நியதி இருந்தால்தான், தீவினைசெய்ய அஞ்சுவர்; நல்வினையில் நாட்டம் செலுத்துவர்.
- "எனைப்பகை யுற்றாரும் உய்வர்; வினைப்பகை
- வீயாது பின்சென்று அடும்” (207)
என்ற திருக்குறள் கருத்தினை உணர்க. அவரவர் செய்த வினைப் பயன் அவரவர்களை வந்தடைதல் தவிர்க்க முடியாதது என்பதை,
- "தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
- வீயாது அடியுறைந் தற்று" (206)
என்ற குறள் வழி உணர்தல் நன்று. வினைகள் பயனைத் தருமா? வினைகளியற்றும் நோக்கங்கள் பயனாகப் பரிணமிக்குமா? வினைகளுக்குப் பயனில்லை. வினைகளை இயற்றும் நோக்கம், வினைகளைச் செய்யும் பொழுது