பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 239


தமிழின் மரபுப்படி நிலம் நான்குதான். அவை முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகியன. ஐந்தாவது நிலம் ஒன்றுண்டு! அதுதான் பாலை. ஆனால் பாலை, இயல்பாக இருப்பதல்ல. நான்கு நிலங்களின் திரிபாலும் மாறுபாட்டாலும் தோன்றுவதுதான் பாலை.

இத்தகு மாறுபாட்டின்-திரிபின் காரணமாக வளம் தருகின்ற பொருள்களின் உறவிலிருந்து நிலம் ஒதுங்கு வதனால், வளத்தைப் பெறவோ, தரவோ முடியாத வறட்சி நிலை ஏற்பட்டு விடுகிறது. வளம் பெறுதலும் தருதலும் ஆகிய சூழல் அல்லது கடமைப்பாடு என்ற இயற்கை நியதியி லிருந்து மரம் விலகி விடுதலின் காரணமாகப் பயன் தராதபெறாத நிலையில் அது வற்றிப் போய் விடுகிறது.

அதுபோலவே, கொண்டும் கொடுத்தலும், அன்பும் உறவும் காட்டிக் கூடிவாழ வேண்டிய மனிதன், அன்பு காட்டும் ஒழுக்க நெறியிலிருந்து விலகியவனின் சுற்றுச்சூழல் வறண்ட பாலைவனமாகி விடுகிறது. அன்பைச் சொரிதற் குரிய வாய்ப்பையும், அன்பைப் பெறுதற்குரிய வாய்ப்பையும் அவன் இழந்து விடுகின்றமையின் காரணமாக வற்றல் மரம் போலச் சாரமற்றவன் ஆகிவிடுகிறான்.

வற்றல் மரம் எப்படித் தளிர்க்காதோ, அது போலவே மனத்தகத்தே அன்பில்லாதவனின் வாழ்க்கை சிறக்காது. ஆதலால், மற்றவர்களிடத்தே மனங் கலந்த அன்பு காட்டுவதே வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுதற்குரிய வழி என்பது வள்ளுவர் காட்டும் வாழ்க்கை நெறி. ஆம்; பிறரை வாழ்வித்து வாழ்தலும், மகிழ்வித்து மகிழ்தலுமே நல் வாழ்க்கையின் இயல்பு என்ற உண்மையினை அழகாக உவமையின் மூலம் வள்ளுவர் நமக்கு உணர்த்துகின்றார். இதோ குறளைப் பாருங்கள்.

"அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று." (78)