பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

105





மார்ச் 29


என்பிழை பொறுத்து ஆட்கொள், இறைவா!


இறைவா, அம்மம்ம! என்னே உன் படைப்பின் ஆற்றல். உன் படைப்பில் பயனில்லாது போனது எது? என்னைத் தவிர. மற்றப் படைப்புகள் எல்லாம் பயன்படுகின்றனவா? நான் என்ன பயன் இல்லாதவனா, இறைவா? நச்சுப்பாம்பு பயன்படுவதுபோல் வேறு எது பயன்படுகிறது என்று கேட்கிறாயா? பாம்பின் தோல் அழகு சாதனமாக விளங்குகிறது. பாம்பின் நஞ்சு, நஞ்சுக்கு மாற்றாக- மருந்தாகப் பயன்படுகிறது.

ஏன் இறைவா, நான் பயனில்லாதவனா என்ன? இறந்தாலும் உனக்குப் பயன் இல்லையா? இருந்தாலும் பயனில்லையா? மன்னித்துக்கொள். நான் பயனற்றுப் போனதற்கு நான் மட்டுமா பொறுப்பு? இல்லவே இல்லை. நீ எனக்கு வழங்கிய சுதந்தரம்தான் காரணம்!

சுதந்தரம்தான் எனது மூச்சுக் காற்று. சுதந்தரமற்ற உயிர் நடைப்பிணம். நான் பிறக்கும்போதே சுதந்தரத்துடன்தான் பிறந்தேன். இறைவா, நீ கூட என்னைப் படைக்கவில்லை. நான் என்றும் உள்ளவன். ஆனால் நான் தலையால் நடக்கத் தலைப்பட்டேனே, அதன் விளைவு நான் பயனற்றவனானேன். இறைவா, என்னைக் கைவிடாதே. என் பிழை பொறுத்து என்னை ஏற்றுக்கொள். வழிகாட்டு. நான் உன்னால் வளர்க்கப்பெற்ற வளர்ப்பு நாய். இறைவா! உன் அடிதொழுது செய்ய வேண்டிய பணிகளைக் கேட்டறிவேன், செய்வேன் இது உறுதி! இறைவா, ஏற்றுக்கொள்.