பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






மார்ச் 30


கையுடைமை கரவறியா நெஞ்சம் தா!


இறைவா, நீ தானே உடல் தந்தாய், வாழ்க்கையளித்தாய். உடலின் தேவைகளை நீ தர மறுக்கின்றாயே. ஏன் இறைவா? வயிறு காலந்தவறாமல் சுவையான சோறு கேட்கிறது. காதலில் கலந்தினிது, மகிழ்ந்துறையும் வாழ்க்கையும் கேட்கிறது. இவைகளை எல்லாம் நீ வழங்காமல் வாளா இருத்தல் நியாயமா? நின் பெருமைக்கு அழகா? ஆம், இறைவா, இன்னும் கேள், நான் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறேன். நீ, அளித்த பொறிகளுக்குப் பயனில்லாமல் அவை அழிந்து கொண்டிருக்கின்றனவே. நின் அருளிப் பாட்டில் எல்லோரையும் ஒக்கப்பார்க்கும் பண்பாடில்லையே. அன்று நீ, சுந்தரருக்கு எவ்வளவோ கொடுத்திருக்கிறாயே. இறைவா, எனக்கு ஏன் நீ கொடுக்கக் கூடாது? என்ன இறைவா! சிரிக்கிறாய்! சிரித்து மழுப்பவிட மாட்டேன், சிக்கெனப்பிடித்திடுவேன்.

நீ வழங்கிய செல்வத்தைப் பெருக்கி வாழ்வாங்கு வாழாமல் நின்னை இரந்து கேட்பது குற்றம்தான், மன்னித்துக் கொள்! நின்னால் ஒரு குறையும் இல்லை! என்னால் அறியாப் பதங்கள் அனைத்தும் தந்திருக்கிறாய்! இறைவா! உழைக்கும் மனம் தந்தருள் செய்! கையுடைமை நெஞ்சம் தா! ஊருடன் கூடியுண்ணும் பெருந்தவத்தினை அருள் செய்! இறைவா வேறென்ன வேண்டும்.