பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






ஏப்ரல் 19


உயிர்க்குலத்தின் பிணி போக்க என்னைப் பணி கொள்க!


இறைவா, பச்சிலைகள் பசுமையாக விளங்குகின்றன. கிடைத்த இடத்தில் கிடைத்த வசதிகளைக் கொண்டே வளர்கின்றன. உயிர்க் குலத்தின் பிணி தீர்க்கும் மருந்துகளாகவும் விளங்குகின்றன. இறைவா, என்னிடத்தில் பசுமை எங்கே இருக்கிறது? கண் பார்வையில் வெறுப்புக்கனல். வாய்ச் சொற்களோ இனிமைப் பண்பிற்கு மாறுபட்டன. இதயத்திலோ பகைப்புகை மூளையிலோ செருக்கு. உடலோ பிணிகளின் கொள்கலன். ஏன், இறைவா இந்த அவல நிலை?

ஓரறிவுயிராகிய செடிகளின் பயன்பாடுகள்கூட ஆறறிவு உள்ள என்னிடம் இல்லையே. இறைவா, என்ன சொன்னாய். ஆறாவது அறிவு எனக்கில்லை என்கிறாயா? அப்படியானால் இறைவா, நான் மானிடன் இல்லையா? இறைவா, நான் பிறப்பில் மானிடன். வாழ்நிலையால் இழிபிறப்பு என்கிறாயா?

இறைவா, என்னை எடுத்தாள். மானிடனாக வாழவை. அறிவு நலன்களைத் தா. இறைவா, நின்னை யறியும் அறிவைத் தா. என் கண்களுக்குக் குளிர்ந்த பார்வையைக் கொடு. இனிய சொற்களையே என் வாய் பேசட்டும், என் இதயத்தில் அன்பு சுரக்கட்டும்.

இறைவா, உயிர்க் குலத்தின் பசிப்பிணியை, உடற்பிணியைப் போக்கும் பணியில் ஈடுபடுத்து! பணி கொள்! இறைவா, என்னைப் பணி கொள்! வாழ்வாங்கு வாழ வாழ்த்து.