பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

129






ஏப்ரல் 22


தொண்டு எனும் தூய உழைப்பில் நின்று வாழ அருளுக!


இறைவா, எருது உனக்குப் பிடித்தமானது எப்படி! எருது, கடுமையாக உழைக்கும் பிராணி, உழைப்பின் பயனை உயிர்க்குலம் வாழ அளிக்கும் பிராணி. இறைவா, நீ என் இதயத்தில் எழுந்தருள வேண்டும். நானும் எருது ஆக வேண்டும். ஆம்! இறைவா, உழைப்பில் சுகம் காணும் மனப்போக்கினைத் தந்தருள் செய்க! உழைத்தால் மட்டும் போதாது. அந்த உழைப்பின் பயனைப் பிறர்க்குரியதென அர்ப்பணிக்கும் மனம் வேண்டும். இந்த மனப்போக்குடன் உழைத்தலே தவம். இத் தவத்தினைச் செய்யும் நன் மனத்தினை அருள் செய்க!

கடுமையான உழைப்பு தவம். ஊருக்குழைத்தல் யோகம். மற்றவர் வாழவாழ்தல், அர்ப்பணிப்புடன் கூடிய வாழ்க்கை. இத்தகு புனித வாழ்க்கையை எனக்கு அருள் செய்க! கைத்திருத்தொண்டு செய்யப் பணித்திடுக. உயிர் நலமுற அருள் செய்க! ஒன்றி நிற்கும் கற்றறிவினைத்தருக. எனது புலன்களும் பொறிகளும் பணி செய்யும் பான்மையில் வளர வாழ்த்துக.

அன்பினில் பொறிகளைத் தோயச் செய்து புலன்களை நினதருளில் நனையச் செய்து தொண்டு எனும் தூய நெறியில் நிற்க அருள் செய்க! இதுவே என் பிரார்த்தனை. மன்றாடல். இறைஞ்சுதல்! இறைவா, அருள் செய்க! தொண்டெனும் தூய உழைப்பில் நின்று வாழ்ந்திட அருள் செய்க!

கு.x.9