பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





ஏப்ரல் 23


சம நிலை உணர்வைத் தந்தருள் செய்க!


இறைவா, உன் சந்நிதியில் தேங்காய் உடைக்கிறேன். நிவேதனம் செய்கிறேன். இறைவா, இவையெல்லாம் உன் விருப்பமா? அல்ல; உனக்குத் தேங்காய் தேவையா? இறைவா, இரண்டும் இல்லையென்பது எனக்குத் தெரிந்ததே. ஆயினும் இறைவா, ஏன் தேங்காய் உடைக்கிறோம்? இறைவா, அப்படியா, வாழ்க்கையில் இன்பம் எளிதாக வந்தமையாது.

எனது வாழ்க்கையை இன்ப வாழ்க்கையாக அமைத்துக்கொள்ள நான் கடுமையாகப் போராட வேண்டும். தேங்காய் எங்கும் காய்க்கிறது; எட்டடி உயரத்திற்கு மேல் உச்சாணிக் கொம்பில் காய்க்கிறது. அதுபோல இறைவா, எனது மன நிலைகளும் உயர்ந்தால்தானே உயர்வு கிட்டும்.

இறைவா, தேங்காய்க்குள் நார், மட்டை, கொட்டாங்கச்சி முதலியவைகளைத் தாண்டித்தான் அந்தச் சுவையானசத்தான உணவுப் பொருள் இருக்கிறது. இறைவா, நான் விரும்பும், துன்பங்களையும் சோதனைகளையும் கடந்துதான் வரும்.

நான் ஏன் துன்பத்திற்கு அழ வேண்டும். உலையில் கொதிக்கும் அரிசி அழலாமா? உலையில் கிடக்கும் இரும்பு அழலாமா? இறைவா. அதுபோலத்தானே எனது வாழ்க்கை? இறைவா, நான் இனி துன்பத்திற்கு அஞ்சமாட்டேன், அழமாட்டேன். இறைவா, அருள் பாலித்திடுக! சமநிலை உணர்வைத் தந்தருள் செய்க!