பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட் சிந்தனை 147




மே 10


சரியான ஒன்றைத் தேடிப் பெறும் அறிவினை அருள்க!

இறைவா, அடியார்களைத் தேடிச் சென்று ஆட் கொள்ளும் அருளாளனே, நானும் தேட அருள் செய். நான் எதைத் தேட? இன்பத்தைத் தேடி அலைந்திடவா? இறைவா, இல்லை, இல்லை. நான் மகிழ்ச்சியைத் தேடி அலைந்தால் கிடைத்து விடுமா? ஒரு பொழுதும் கிடைக்காது.

இறைவா, எது சரியானதோ அதை நான் தேட வேண்டும். ஆம் இறைவா, உண்மையான மகிழ்ச்சி தரும் பொருள் இதுவென, ஆசை காட்டாது; தூய அறிவே காட்டும். என் வாழ்க்கைக்கு எது நன்மை பயக்குமோ அதுவே சரியானது. என்னைச் சார்ந்தவர்கள் வாழ்க்கைக்கு, எது நன்மை செய்யுமோ, அது சரியானது. என் நாட்டு மக்களுக்கு எது நன்மையானதோ அதுவே சரியானது.

மன்னுயிர்க்கெல்லாம் எது ஆக்கம் தருமோ அதுவே சரியானது. அதுவே எனக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தர இயலும், அந்தச் சரியான ஒன்றை நான் தேடி அடைந்து விட்டால் என் வாழ்க்கை இன்பமே. எந்நாளும் துன்பமில்லை.

இறைவா, அந்தச் சரியான ஒன்றை - என் வாழ்வுக்கு மகிழ்வளிக்கக் கூடிய ஒன்றைத் தேடும் அறிவினைத் தா! அந்தச் சரியானதைத் தேடும் உழைப்பினில் ஈடுபடுத்துக. இன்பநிலை தானே வந்தெய்தும் இறைவா, அருள் செய்க!