பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

157





மே 20


மனமும் பொறிகளும் ஒத்திசைந்து இயங்கிடும் வாழ்க்கையினை அருள் செய்க!

இறைவா! நினைப்பவர் மனம் கோயிலாகக் கொண்ட தூயவனே! என் மனம் நின் கோயிலாவது எப்போது? இப்போதைக்கில்லை. நான் இன்னும் நினைக்கவே பழகவில்லையே! மனத்தில் ஆசைகளால் தோற்றுவிக்கப்பெறும் அலைகளில் கிடந்து தவிக்கிறேன். இறைவா, என்னைக் காப்பாற்று!

நான் நினைக்கும் நிலையில் என் மனத்தைப் பழக்கியருள்க. சுயாதீன நிலையில் நினைத்திடும்படி செய்க. தொடர்ச்சியாக நினைந்து வாழும் நெறியில் ஈடுபடுத்துக! நான் நினைப்பவைகளுக்கும் என் இயல்பான வாழ் நிலைக்கும் இணைப்புண்டாக்கி அருள் செய்க!

மனத்தே நினைத்தது என் அகநிலை வாழ்வாகவும் புறநிலை வாழ்வாகவும் அமைய அருள் செய்க! நினைப்பொடு இயைந்த வாய்மை தழிஇய வாழ்நிலையை அருள் செய்க! என் நினைப்புக்களை நான் செய்யும் காரியங்களுடன் நெருங்கிய சம்பந்தம் கொள்ளும்படி அருள் பாலித்திடுக!

மனமும் பொறிகளும் ஒத்திசைந்து இயங்கிடும் உத்தம வாழ்க்கையினை அருள் செய்க! மனம் பொருந்திய வாழ்வினை நல்கி, வெற்றிகளை அருளிச் செய்க!

நினைக்கும் மனம்; நினைப்பொடு பொருந்திய செயல்; செயலுக்கிசைந்த வாழ் நிலையே தவம்! அருள் செய்க! என் மனத்தைப்புறம் போகவிடாமல் நிறுத்தி உன்னை நினைந்து வாழும் பேற்றினை அருள் செய்க!