பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






மே 21


இந்தச் சமுதாயத்திற்கு என் வாழ்வு அடிக்கல்போல் மறைந்திருந்து தாங்கி நிற்க அருள்க!

இறைவா, புகழ்ச்சியைக் கடந்த போகமே! என்னை ஆட்கொண்டருள் செய்க! புகழ், ஆம்! மனித நாகரிகத்திற்கு நஞ்சென அமைந்துள்ள புகழ் என்னும் இச்சை வருத்துகிறது. புகழ், நீரில் குமிழி போன்றது!

புகழ், பொல்லாங்கைத் தோற்றுவிப்பது. புகழ், எதிரிகளைத் தோற்றுவிப்பது; புகழ், கள்ளினும் கொடிய போதை தருவது. இறைவா, என்னைப் புகழ் இச்சையினின்றும் மீட்டு ஆள்க! நான் நல்லதை-நன்மை கருதியே செய்ய வேண்டும். நன்மை, நன்மைக்காகவே என்ற அறநெறியில் நின்றிடும் பேற்றினை அருள் செய்க!

புகழ் விரும்பாப்புண்ணிய மனத்தினை அருள் செய்க! நாடறியாத அடக்கமான அறவாழ்க்கையினை அருள் செய்க! எல்லாருக்கும் எளியோனாக, தாழ்வெனும் தன்மையுள் நடந்திடும் நல்வாழ்க்கையினை அருள் செய்க!

மண்ணிற்குள் மறைந்து கிடந்தே மரங்களை வாழ்விக்கும் வேர்களைப்போல இந்தச் சமூக வாழ்க்கைக்கு நான் வேரென வாழ்ந்திடும் நெறியில் நிறுத்தி அருள் செய்க! எடுப்பான மாளிகைகள் மண்ணில் மறைந்து கிடக்கும் அடிக்கற்களின் வலிமையிலேயே நிற்கின்றன! என் வாழ்வும் இந்தச் சமுதாயத்திற்கு அடிக்கல்போல அமைய அருள் பாலித்திடுக! - - பொருளின் ஆற்றல் பொருளுக்குள் ஒளிந்து கிடந்தே இயங்குகிறது. இந்தச் சமுதாயப் பெருவாழ்க்கையில் ஆற்றலாக நான் ஒதுங்கியிருந்து உழைத்து உயர்த்தும் பெரு வாழ்வினை அருள் செய்க! நான் பணி செய்து கிடக்கும் புண்ணியப் பாங்கினை அருள் செய்க!