பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

163






மே 26


இறைவா, என் மனத்துள் "கருத்து" உருவாகும் வண்ணம் அருள் செய்க!

இறைவா, மனத்தில் இருக்கும் கருத்தறிந்து முடிக்கும் முதல்வா! என்னுடைய காரியங்கள் பல நிறைவேறவே இல்லையே. இறைவா, ஒன்றல்ல. பலப்பல கருத்துக்கள் காரியங்களாக வில்லையே. நிறைவேற வில்லையே.

என் கருத்து முடியவில்லை. இறைவா! என்ன சொல்கிறாய்? "என் கருத்து” என்பதே பொய் என்று கூறுகிறாயா? இது என்ன இறைவா, எழுச்சி வசப்பட்ட உணர்ச்சியால் அகநிலையில் உருவானது எல்லாம் கருத்தாகாதா? அப்பட்டமான ஆசைகள் கருத்தாகாதா? ஆம். இறைவா, கருதி முடிவு செய்தல் கருத்து.

கருத்துக்கு நோக்கம் இருக்கும். நோக்கம் இல்லாத ஒன்று கருத்தாக இயலாது. நோக்கமே வாழ்க்கையின் முதல், முடிவு, எல்லாம். நோக்கமே வாழ்க்கையின் இன்ப வாயிலைத் திறக்கும் சாவி, நோக்கமே வாழ்க்கையை இயக்கும் சக்தி.

இறைவா, என் மனத்துள் கருத்து உருவாகும் வண்ணம் அருள் செய்க, அக்கருத்தும் உயரிய நோக்கம் கொண்டதாக அமைய அருள் செய்க. உயரிய நோக்கத்தினைக் கொண்டு உழைப்பில் உழந்து உயரிய இடத்தினைப் பிடிக்க அருள் செய்க. இடர்களைத் தாண்டியும் அச்சப்படாமலும் ஆள்வினை இயற்றும் அருள்திறனை வழங்கு.

நோக்கம் எனக்குத் தேவை! நின் அருள் நோக்கு என்பால் என்றும் இருக்க வேண்டும். நின் அருள். நோக்கு என்னை ஆளாக்குதல் வேண்டும். இறைவா, அருள் செய்க!