பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

171






ஜூன் 3
என்னுள் இருப்பது சிறத்தல் வேண்டுமென எடுத்துக் காட்டிய இறைவா, போற்றி.

இறைவா! என்னால் அறியாப்பதம் தந்தருளிய என் தந்தையே! தலைவனே! நீ எனக்கு நிறைய அருளிச் செய்துள்ளனை. ஆனாலும் நான் இன்னமும் தேடுகின்றேன். என்னுடைய பற்றாக்குறை ஒரு தொடர்கதை. அதனால் தேடிக் கொண்டிருக்கிறேன்!

இறைவா, என்ன அருளிச் செய்கின்றாய்! "உள்ளது சிறத்தல்”- ஆம் இறைவா! என்னை மன்னித்துக் கொள். என்னிடம் உள்ளதை நான் சிறப்படையச் செய்து, பயன் கொள்ளாத நிலையை இழிநிலையை எடுத்துக் காட்டிய கருணைக் கடலே. நின் கருணைக்கு ஆயிரம் ஆயிரம் போற்றிகள்!

இறைவா! என்னிடம் உள்ள அறிவு, இன்னமும், பட்டை தீற்றப்படவில்லை. என்னிடம் உள்ள ஆற்றல் முழுமையாகப் பயன்படுத்தப் பெறவில்லை. இறைவா, எனக்கு வாய்த்த செல்வக்களங்கள் கூட முழுமையாகப் பயன்படுத்தப் பெறவில்லை!

இறைவா, மன்னித்துக்கொள். "உடையது பெருக்காதவனிடம் உள்ளதும் நிலைக்காது" என்ற ஆப்த மொழியை நான் உணர்ந்து கொள்ளத் துணை செய்த என் தலைவா!

நான் என்னை நம்புகிறேன். என் அறிவை நான் பெருக்கி வளர்த்துக் கொள்ளும் பாங்கினை அருள் செய்க. என் ஆற்றல் அளப்பரியது. படைக்கும் தன்மை உடையது. என் ஆற்றலை எஞ்சுதலின்றி முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்!

என் உடைமையுலகம் பெரியது. அதன் வளம் முழுதும் கண்டு, கொண்டு வந்து குவித்தாலே போதும் போதும் என்றாகிவிடும். இறைவா, நான் தற்சார்பினனாக வாழ அருள் செய்க!