பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






ஜூன் 8


தேவ, தேவே! தீமையெல்லாம் மடிக! நன்மை வந்தெய்துக!

இறைவா, முப்புரம் எரித்த முதல்வா! நான் உனக்கு வழிபாடு செய்யும் வழிகள் பலப்பல! உன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கவும் ஏராளமான வாயில்கள் உண்டு!

இறைவா, நீ, நீதி! நீ அன்பு! நீ, அருள்: நீ, கருணை! நீ, இன்பம்! இறைவா, இந்த உயரிய பண்புகள் குடி கொண்டுள்ள ஆன்மாவின் இதயத்தில் குடியிருந்தருள்வாய்! இறைவா, இப்பண்புகள் உடையவர்கள் நல்லவர்கள்! வலிமையுடையவர்களே நல்லவர்களாக வாழ முடியும்!

அற்பச்செய்திகளில் சலுகை காட்டுவது, மன்னிப்பது நன்மையும் அல்ல; வலிமையும் அல்ல. வாழ்க்கையில் நிகழும் பிழைகளைப் பொறுத்துக் கொள்ளலாம்; ஆனால், தாங்கிக் கொள்ளக் கூடாது!

களைகள் மண்டிய கழனியில் பயிர் வளருமா? அது போல அநீதி நிலவும் இடத்தில் நீதி இருத்தல் இயலாது! பொய்யமை நிந்திக்காது போனால் உண்மையைச் சாதிக்க இயலாது. சோம்பலை விட்டொழிக்காத இடத்தில் நல்வாழ்க் கையைப் படைக்க இயலாது.

இறைவா, நான் தீமையை எதிர்ப்பதும் உனக்குச் செய்யும் வழிபாடே என்று உணர்த்தியருளிய மாட்சிமையை என்னென்பேன்! தீமையுடன் சமரசம் கூடாது. கூடாவே கூடாது. தீமையை எதிர்ப்பதுவே வாழ்க்கையின் குறிக்கோள். இதுவே நன்மைப் படைப்பின் தொடக்கம்.

தீமையை எதிர்ப்பது, தீமையுடையோரை அங்கீகரிக்காமல் இருப்பது ஆகிய நெறிமுறைகளில் நின் ஆணை வழி நடப்பேன். இது உறுதி. தீமையை எதிர்ப்பது உன் ஆணைக்குக் கட்டுப்பட்ட வாழ்க்கை என்பதை உணர்த்திய தேவ தேவே! தீமையெலாம் மடிவுறுக! நாளும் நன்மை வந்தெய்துக!