பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





செப்டம்பர் 12


இறைவா, நான் மரணத்திற்கு ஒப்பான சுயநல வாழ்க்கையினின்றும் விலகி அன்பு செய்து வாழ்ந்திட அருள்க!

இறைவா, ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனே! நான் வாழ்கின்றேன்! ஆம். இறைவா, இதில் உனக்கு என்ன ஐயம்! நான் வாழ்கின்றேன். வேலை செய்கின்றேன்! பொருள் செய்கின்றேன். தொண்டும் செய்கின்றேன்.

இறைவா, என்ன அருளிச் செய்கின்றாய்? இறைவா, நீ அருளிச் செய்வது என் செவிப்புலனைத் தாக்குகிறது! உணர்ச்சி வசப்படுகின்றேன்! இறைவா, என்னை, செத்து விட்டதாக அருளிச் செய்கின்றனையே! நான் பிணமா? ஆம், ஆம்! நான் ஒரு பிணம்! உண்டு நடமாடும் பிணம்! இப்படி அருளிச் செய்கின்றனை!

இறைவா, என்னைப் பழி சொன்னால் போதுமா? என்னைச் சாவிலிருந்து மீட்டருள்க! நின் நெறி பிழையாது வாழ்வேன்! இறைவா, உண்மை! முற்றிலும் உண்மை!

நான் அன்புடையவன்! ஆனால் என் வாழ்க்கை முழுதும் அன்பாக மாறவில்லை! அன்பே, என் வாழ்வை இயக்கும் விதியாகவில்லை! ஆம் உண்மை! என்ன இறைவா! சுயநலம் மரணத்திற்குச் சமம்!

இம்மை, மறுமை இரண்டிலும், சுயநலம் மரணத்திலும் கொடிய துன்பத்தையே தரும். இறைவா, நன்றருளிச் செய்தனை! நலம்புரிவதே வாழ்வு ஆகும். பிறருக்கு நலம் செய்யாது வாழ்தல் சாதலுக்குச் சமம்! இல்லை, சாதலே தான்! இறைவா, நான் சாகாமல் காப்பாற்று!

என் வாழ்க்கை அன்பு ஆகட்டும்! வஞ்சகமின்மை வாழ்க்கையின் நியதியாகட்டும்! பொறுமையுடன் என்னைச் சுற்றி வாழ்வோரின் நலத்திற்காகப் போராடும் இயல்பினைப் பெற்றுள்ளேன். வாழ்த்தியருள்க! வாழ்ந்திட அருள் செய்க!