பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருவருட் சிந்தனை


ஜனவரி 1


இறைவா! காலத்தை முறையாகப் பயன்படுத்தக் கருணை செய்க!

இறைவா! காலத்தின் காலமாக நின்றருளும் இறைவா! நீ காலத்தைக் கடந்தவன். நானோ இரண்டு நிலையும் இல்லாதவன்! நான் கால எல்லைக்குள் சிக்கித் தவிக்கின்றேன்! அதனால் காலத்தைக் கடத்த முயற்சி செய்கிறேன். என்னால் காலத்தை வெல்ல முடியும். ஆனால் காலத்தைக் கடத்தி விடுவதில் எனக்கு ஒரு அற்ப திருப்தி.

வீணே காலம் கடத்தப் பெறுமானால் ஆற்றல் மிக்க காலம் வறிதே போகுமே. காலத்தை முறையாகப் பயன்படுத்துவேன், கடமைகளைச் செய்வேன்! இறைவா, நான் அறிந்து தவறு செய்யவில்லை. நீ எனக்கருளியுள்ள ஆணை ஒரு தேரை இழுத்து நிறுத்து என்பது. உன் ஆணையை நிறை வேற்றுவது என் கடமை! ஆனால் தேரை எப்படி ஒருவர் இழுப்பது? சிலரைத் துணைக்குச் சேர்த்துக் கொண்டேன். இறைவா, என் துணைவர்களுக்கு நல்லெண்ணத்தைக் கொடு. காலத்தைப் போற்றிக் கடமையைச் செய்ய வேண்டும் என்ற ஆவேசத்தைக் கொடு. அவர்களையும் வாழ்த்து!

இறைவா இந்த ஆண்டினை “உழைப்பு ஆண்டாக"ச் செலவிட உறுதி எடுத்துக்கொள்ள அருள் செய்! வீணான விவாதங்களைத் தவிர்த்திடக் கருணை பாலித்திடுக! யாரோடும் பகை கொள்ளாமல் வாழும் வண்ணம் அருள் பாலித்திடுக! எல்லோருக்கும் அன்பு செய்யும் விரிந்த இதயத்தைத் தா! உழைப்பு! உழைப்பு!! உழைப்பு!!! இதுவே இந்த ஆண்டின் குறிக்கோளாகக் கூட்டித் தருக, இறைவா!