பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

298

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






அக்டோபர் 8


இறைவா, உன்னை நினைந்து வாழ்வது என் கடன்!



இறைவா, நேற்று இரவு உறக்கமே இல்லை. இறைவா! உடலில் குறையில்லை! கன்றை, தாய்ப்பசுவிடமிருந்து பிரித்துக் கட்டி விட்டார்கள். கன்று தாயை நினைந்து கத்தியது. இறைவா, ஆறறிவு இல்லாத உயிரால் தாயின் பிரிவைத் தாங்க இயலவில்லை. ஆதலால் அது கத்துகிறது!

இறைவா, நீ எனக்குத் தாய்! இல்லை, இறைவா! தாயினும் சிறந்த தாய். என் பிறவி கெட நீ உருக்கொண்டாய்! இறைவா, நான் ஆணவத்தில் கிடந்த போது- அறியாமையில் ஆழ்ந்து கிடந்த போது என் இரங்கத்தக்க நிலையினை எண்ணி உடல் கொடுத்தாய்.

உடலும் உள்ளமும் தந்து பொன்னோடும் பொருளோடும் புணர்த்தினாய்! இதற்கு ஏது கைமாறு! ஆனால், நின்னைப் பிரிந்து வாழ்கின்றேன்! இல்லை இறைவா, மறந்து வாழ்கின்றேன்!

உன்னை நினைப்பது - உன்னை நினைந்து, நினைந்து உணர்ந்து உணர்ந்து வாழ்வது என் கடன். என் பணி. இறைவா, என்னை மன்னித்துக் கொள். நினைக்கிறேன். நினையாது ஒருபோதும் இருந்தறியேன். இறைவா, மன்னித்து அருள்க!

இறைவா, உன்னை நினைந்து வாழ்ந்திட அருள் செய்க!