பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



திருவருட் சிந்தனை

301



அக்டோபர் 11


இறைவா, என் வாழ்க்கையில் மனித நேயத்தை அருள்க!

இறைவா, வள்ளற்பெருமான், ஒருமையுடன் நினது திருவடி நினைக்கும் வரம் வேண்டினார். இறைவா, ஒருமை உணர்வு எளிதில் வர மறுக்கிறதே. ஆம், இறைவா! பொறிகளின் அராஜகம் ஒரு புறம். புலன்களின் சேட்டை ஒரு புறம்.

"நான்”, “எனது” என்று நஞ்சேறிய நாணயமற்ற செயல்கள், ஆணவத்தின் அட்டகாசம், மொழி, இனம், மதம் என்பவற்றின் பெயரால் வளரும் பகைகள், இத்தனையும் என்னை நிலைகுலையச் செய்கின்றன.

இறைவா, ஒருமை உணர்வு அரும்பவில்லை. அரும்ப மறுக்கிறது. ஒருமைப் பாட்டுணர்வினைத் தந்து ஆட்கொள். ஆம், இறைவா, நீ சொல்வது முற்றிலும் உண்மைதான். வேற்றுமையில் ஒற்றுமை காணும் உயர் பண்பாடு தோல்வி கண்டுள்ளது - ஏன், இறைவா?

ஒருமைப்பாட்டின் ஆதாரசுருதி மனிதநேயம்தான். எல்லாரையும் மனிதர்களாக மதிப்பதுதான். மனிதர்களிடம் அன்பு காட்டுவதுதான். "உன்னைப் போல் பிறரை நினை.” இறைவா, நல்லமந்திரம் கற்றுக் கொடுத்துள்ளனை!

இனி, என் வாழ்க்கையின் ஆதார சுருதி மனித நேயமாகத்தான் இருக்கும். புற நிலையில் ஒருமை நிலை கண்டு விட்டால் அகநிலை ஒருமை தானே வந்தமையும். ஆம் இறைவா, என் வாழ்க்கையில் மனித நேயத்தை அருள் செய்க!