பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



திருவருட் சிந்தனை

305



அக்டோபர் 15


முறைப்படுத்திச் செய்தால் எல்லாப் பணிகளும் செய்யலாம்!
இறைவா, அருள் செய்க!

இறைவா! குலச்சிறையார் போற்றி வணங்கிய இறைவா! இன்று நீ எனக்கு இடும் பணி யாது? இன்றைய சமூக அமைப்பு நான்குபுறமும் கலகலத்து வருகிறது. நோக்குந் திசைதோறும் அமைதி இல்லை.

நான், நான்கு திசையிலும் ஒடி அலைகிறேன். எல்லாம் அவசியம் போலத் தெரிகிறது. ஆனால், ஒன்றையும் உருப்படியாகச் செய்ய முடிவதில்லை. நின்னருளிச் செயலில் யாதொரு குறையுமில்லை. என் முயற்சியிலும் குறையில்லை.

இப் பிறப்பில் யானறிந்து பணி செய்யாத நாள் இல்லை. ஆயினும், சமூகம் எழுந்திருக்க முடியாத அளவுக்குப் பிரிவினை வாதம் பிடித்தும், ஆணவம் பிடித்தும், படுத்துக்கிடக்கிறது.

நின் சந்நிதியில் தொழும்பாய்க் கிடந்து தொண்டு செய்ய வேண்டும். இது என் ஆசை. நின்னருட் பேற்றிற்குரிய மக்களுக்குப் பணி செய்ய வேண்டும். படிக்க வேண்டும். எழுத வேண்டும். இத்தனை ஆசைகள் இறைவா, நான் என்ன செய்ய?

நீ பணித்திடும் பணியைச் செய்ய மனம் ஒருமைப்படுகிறது. அனைத்துப் பணிகளும் தேவைதானா? முறைப்படுத்திச் செய்தால் எல்லாம் செய்யலாம் என்பது நின் அருட்பாலிப்பு.

குலச்சிறையார் அமைச்சுப் பொறுப்பிலும் இருந்தார். நின்றசீர் நெடுமாறனின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்தார். மங்கையர்க்கரசியாரின் குறிக்கோளையும் அடைவித்தார். தமிழ் வழக்கு அயல்வழக்கினை வெற்றிபெறத் தொண்டு செய்தார்.

இறைவா, குலச்சிறையார், மங்கையர்க்கரசியார் போல, நானும் உனக்குப் பணி செய்ய மனமிருக்கிறது. ஆனாலும், நின்னருள் துணை தேவை. எடுக்கும் காரியம் யாவினும் வெற்றி பெறத் தொடர்ந்தருள் செய்க! சிந்தையில் தெளிவாக நின்றருள் செய்க!

கு.X.20.