பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஜனவரி 4


ஆகாதவற்றைக் கழித்தாலே வெற்றி விளையும்


இறைவா, கணிதத்தில் கழித்தல் என்பது ஒன்று! ஆம், இறைவா! வாழ்க்கையிலும் கழித்தல் இன்றியமையாத ஒன்று. ஏன்? கழித்தல் இருந்தால்தான் மற்ற கூட்டல், பெருக்கல், வகுத்தல் எல்லாமே நடைபெறும். ஆக, இறைவா! கணக்கில் மையம் கழித்தல். வாழ்க்கையிலும் அப்படியேதான்! உடலில் தோன்றும் கழிவுப் பொருள்களை அவ்வப்பொழுது கழித்து விட்டால் நோயே வராதாம். உடலின் கழிவுகள் அன்றாடம் கழிக்கப்பட்டால் அற்புதமான நலம் இருக்குமாம். இறைவா, இது மட்டுமா? என்னுடைய கெட்ட குணங்களை- கெட்ட நடைமுறைகளைக் கழித்தால்தானே நல்ல பழக்கத்தை ஏற்க முடியும்! நாள்தோறும் நேற்றைய தவறுகளை- தவறுக்கான காரணங்களைக் கழித்தால்தானே அவ்வழி வெற்றிகள் வந்தமையும். இறைவா! என்னுடைய இன்ப துன்பத்திற்கு நீ காரணமல்ல; உலகமும் காரணமல்ல; நானேதான் காரணம்! என்னுடைய செயல்களே காரணம்! என்னுடைய ஊழே காரணம். இறைவா, ஊழ் என்பது வேறு ஒன்றும் அல்லவே. என்னுடைய பழக்கவழக்கங்களின் பயன்பாடுகள் அனுபவத்திற்கு வரும்பொழுது ஊழ், விதி, வினை என்று நாமகரணம் செய்து கொள்கின்றன. இறைவா, இன்றுமுதல் ஆகாதன கழித்தலில் கவனமாக இருப்பேன்!

இறைவா, தன் முனைப்பைக் கழிக்க வேண்டும். அம்மம்ம, இறைவா "நான்" கெடுத்தது கொஞ்சமா? இறைவா எனக்குக் கோபம் உண்டு! இறைவா, கோபத்தைக் கழிக்க வேண்டுமா? சரி! கோபத்தையும் கழித்து விடுகிறேன். இறைவா, இந்த கழித்தல்கள் நடைபெற உறுதியைத் தா!