பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

331






நவம்பர் 10


இமைப் பொழுதும் நின்னை மறவாமை வேண்டும்! இறைவா, அருள்க!


இறைவா! எல்லா உலகமுமாய் இருக்கின்ற இறைவா! வாழ்க்கை வெள்ளத்தில் நின்றவர்கள் சிலர். அவர்கள் உன்னை நினைந்து ஆட்பட்டவர்கள். உன் கருணையால் நின்றவர்கள்-நிற்கின்றவர்கள்.

"உண்ணாமலும் நீர் பருகாமலும் இருக்கமுடியும். ஆனால் இறைவனை எண்ணாமல் பிரார்த்தனை இல்லாமல் என்னால் ஒரு நொடி கூட இருக்க முடியாது” என்றார் அண்ணல் காந்தியடிகள். இறைவா, எனக்கும் இந்த வரம் வேண்டும்!

இறைவா, உன்னை எப்போதோ ஒருநாள் கும்பிடுகிறேன். எனக்கு இடர்ப்பாடுகள் வந்த பொழுது விரைந்து உன் சந்நிதிக்கு வருகிறேன். ஆனால் என்றும் எப்பொழுதும் உன் நினைவு எனக்கு இல்லை. இறைவா, மன்னித்தருள் செய்க!

இறைவா, இமைப்பொழுதும் நின்னை மறவாமை வேண்டும். இறைவா, உனது அருள் நலங்கனிந்த திருவடி களை நிறைந்த வண்ணம் வாழ்தல் வேண்டும். நினது அருட் புனலில் என் நெஞ்சம் நனைதல் வேண்டும். பத்திமை தோய்ந்த பெரு வாழ்வினை அருள் செய்க!

இறைவா, உன் திருநாமமே எனக்கு நிதியாக வைத்த பொருள்! என் சித்தத்தை நின் திருநாமத்தைச் சிந்திப்பதில் ஈடுபடுத்துதல் வேண்டும். உனக்குப் பணி செய்ய உன்னை எந்நாளும் நினைக்க வேண்டும். உன் திருக்கோயில் வலம் வருதல் வேண்டும்.

உன் திருக்கோயிலைத் துய்மை செய்ய வேண்டும். உன் புகழ் பாட வேண்டும். என் நா நின் திருநாமத்தை மறத்தல் கூடாது. என் நெஞ்சு நின்னை மறத்தலாகாது. இவ்வண்ணம் வாழ அருள் செய்க!