பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



26

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஜனவரி 10


இறைவா! அறிவார்ந்த ஆள்வினையில் என்னை
ஈடுபடுத்தியருள்க!


இறைவா வலிமையான கட்டடத்தைத் தாங்க நிலத்திற்கும்கூட வலிமை சேர்க்க வேண்டியிருக்கிறது. இறைவா, என் வாழ்க்கை, கட்டிய மாளிகையாக - நெடு நாள் நிற்கும் மாளிகையாக - நிற்கவேண்டுமானால் வலிமை தேவை, உறதி தேவை! 'பொக்கு' என்ற நிலையில் ஆசைகளுக்கும் அச்சத்திற்கும் இரையானால் எப்படி என் வாழ்க்கை மாளிகையாகும்? இறைவா, பெரிய காரியங்கள் செய்யப் பிறந்தவன் நான். என் வாழ்க்கை வெறும் ஆசைகளால்-அச்சத்தால் அழிந்து விடாமல் காப்பாற்று.

ஒயாது உழைத்திடும் வலிமையை உடலிற்குத் தந்தருள் செய்க! எடுத்த குறிக்கோளை நோக்கி அசைவிலாத-இடையீடு இல்லாத முயற்சியினை மேற்கொண்டு செல்ல வழி காட்டு!

என்னை அறிவார்ந்த ஆள்வினை நெறியில் ஈடுபடுத்துக. ஊக்கம் நிறைந்த உள்ளத்தினை உவந்தே தந்தருளல் வேண்டும். அறிவில் தெளிவையும், அசைவில், உழைப்பையும் வழங்கி வாழச் செய்திடுக. வாழ்வாங்கு வாழ்ந்திட அருள் செய்க!