பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



திருவருட் சிந்தனை

27



ஜனவரி 11


இறைவா, எல்லாம் நன்மைக்கே என்று எண்ணும் உள்ளம் தா.


இறைவா, நன்று உடையானே, தீயது இல்லானே, இறைவா நன்மை எது? தீமை எது? உலகத்தின் நிகழ்வுகளில் நன்மை இல்லை; தீமை இல்லை. அந்த நிகழ்வுகளை அனுபவிக்கும் எனது உளப்பாங்கிலேயே நன்மை இருக்கிறது அல்லது தீமை இருக்கிறது. இறைவா, நிகழும் நிகழ்வுகள் அனைத்தும் நன்மையே.-நன்மைக்கே என்று எற்றுக்கொள்ளும் நல்ல மனதைத் தா! நான் நல்லவனானால் என்னைச் சுற்றிலும் நன்மையே நிகழும். இது நியதி.

இறைவா, தீமையையும் நன்மையாக ஏற்கும் பேருள்ளத்தினைத் தந்தருள் செய்க! நல்லனவே எண்ணும் இதயத்தினைத் தந்தருள் செய்க! நல்லனவே நினைக்கும் உள்ளத்தினை உவந்தருள் செய்க! எங்கும், எதிலும், எந்தச் சூழ்நிலையிலும் நன்மையையே காணும் பேரருள் உளத்தினை வழங்கி அருள் செய்!

நன்மையே என் வாழ்வின் முதல். நன்மையை என் வாழக்கையின் ஆதாரச் சுருதியாக அமைத்து வாழ்ந்திட அருள் செய்க!