பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

373






டிசம்பர் 22



எனது நாடு அமைதியோடு நிலவிடவும் எல்லோருக்கும் நான் அன்பு காட்டவும் இறைவா அருள்க!

இறைவா, பொதுவில் ஆடும் ஆடல் வல்லானே! போற்றி! போற்றி!! எனது நாடு இப்படிக் கலகக்காடு ஆகிறதே! இறைவா, இதனைக் காக்க உனக்குத் திருவுள்ளம் இல்லையா?

இறைவா, நீ மகிழ்ந்து திருவிளையாடல்கள் நிகழ்த்திய நாடல்லவா? புண்ணிய பூமி என்றெல்லாம் புகழ்கிறார்கள்! ஆனால் இன்றைய நடப்புகள் அப்படி இல்லையே? இறைவா! என் நாட்டைக் காப்பாற்று!

இறைவா, ஆம், உண்மை! நீ ஆயிரம் ஆயிரம் தடவை அருளாளர்கள் மூலம் எனக்கு எடுத்துக் கூறியும் நான் திருந்திய பாடில்லை! தனி மனித முனைப்பு, அலட்சியப் புத்தி, தன்னயப்பின் மிகுதி, இவைகளால் நின் அடியார்கள் கற்றுத் தந்த அறிவுரைகள் பயன்படாமல் போய் விட்டன!

நான் சார்புகள் காரணமாக அன்பு காட்டுவதில்லை. ஏன்? என்னைச் சாராதவர்கள் எனக்கு உடன்பாடில்லாத வர்கள்; இந்த உலகில் வாழ உரிமையில்லாதவர்கள் என்றே முடிவு செய்கிறேன்! நானே அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்கிறேன்! இறைவா, இந்த நிலையிலிருந்து எடுத்தாள்க!

இறைவா என் நாட்டை மீட்டருள்க! நான் விருப்பு வெறுப்பின்றி எச்சார்புகளையும் சார்ந்து வாழ்தல் வேண்டும். இத்திறனை அருள் செய்க!

இறைவா, எல்லாருக்கும் நான் அன்பு காட்டுதல் வேண்டும். நல்லன செய்ய வேண்டும்! உலக உயிர்கள் அனைத்தும் மகிழ்வாய் வாழ வேண்டும்! இந்த உயர் உள்ளத்தினை இறைவா, எனக்குத் தா! அன்பு அமைதி பெருக அருள் செய்க!