பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



திருவருட் சிந்தனை

29



ஜனவரி 13


வாய்மையே வாழ்வாக, தவமாக ஏற்கும் உறுதியினைத் தா!


இறைவா, கணக்கு வழக்கினைக் கடந்த கடவுளே! கணக்கில் 'கிராப்' என்று ஒரு பகுதி உண்டு! இந்தக் கணித முறையின் மூலம், ஒன்றின் வளர்ச்சியை, உயர்வை அல்லது தேய்மானத்தை, கண்ணுக்குப் புலனாகக் கூடிய கோடுகள் மூலம் காட்டலாம்! இறைவா, என் வாழ்க்கையின் வளர்ச்சியை இப்படி வரைபடம் போட்டுப் பார்த்தால் அழுவதா? சிரிப்பதா? என்ற நிலை தோன்றும்.

பொய் பெருகி வளர்கிறது. பொழுது சுருங்குகிறது. இறைவா, கள்ளமறியாத குழந்தையாக இருந்தபொழுது "பொய்” எனக்கு அறிமுகம் இல்லை. இன்றோ இறைவா "பொய்யின்றிப் பொருளுடைய வாழ்வில்லை" என்ற நிலைக்கு ஆளாக்கப் பெற்றுள்ளேன். "பொய்ம்மையும் வாய்மையிடத்த" என்ற திருக்குறள்தான் இன்றுள்ள ஒரே சமாதானம். நம்பிக்கை, இறைவா, ஏன் என்னை இந்தப் பொய்ம்மை நிறைந்த வாழ்க்கையில் ஈடுபடுத்தி விளையாடுகிறாய். பொய் பொய்தான்! இறைவா, பொய்ம்மையே வேண்டாம். வேண்டவே வேண்டாம்! அருள் செய்க!

வாய்மை நெறி நிற்க அருள் செய்க! வாய்மையே பேச வேண்டும். பொய் கலப்பில்லாத்தூய வாழ்க்கை வாழ அருள் செய்க. வாய்மையே வாழ்வாக, தவமாக ஏற்கும் உறுதியினைத் தந்தருள் செய்க! வாய்மையில் சிறந்த பிறிதொன்று இல்லை. இறைவா, வாய்மை வழுவாத நிலை அருள் செய்க!