பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட் சிந்தனை

31



ஜனவரி 15
உழைப்பில் இன்பம் காணும் இனிய பேற்றினை அருள்க!


இறைவா! ஏறூர்ந்த செல்வா, நல்ல இளைய ஏற்றினை அடக்கி ஊர்தியாக்கி எழுந்தருளி வருகின்றவனை. நானும் தான் மஞ்சு விரட்டில் மாடு பிடிக்கிறேன். எப்படி? நாலுபேர் பறை கொட்டி மாட்டினை மிரளச்செய்கிறார்கள், இன்னும் நாலுபேர் கம்பு கொண்டு விரட்டுகிறார்கள். ஓர் ஏற்றினை அடக்கிப் பிடிக்க இத்தனை உதவிகள்! அப்படியும் அந்த ஏறு அகப்படுவதில்லை. இறைவா, இஃதொரு விளையாட்டு! எதற்காக?


ஏறு, உழைப்பின் சின்னம்! உழைப்பினில் ஊர்ந்து வாழ்க்கை இயங்கின் வெற்றி பெறலாம். உலா வரலாம். இது தத்துவம். நானும்தான் உழைக்கிறேன். இல்லை உழைப்பது போல உழைக்கிறேன்! இதற்கே எத்தனை பேர் உதவி. குறைந்தது அரை டஜன் பேர். ஒட்டு மொத்தமான கணக்குப் பார்த்தால் பலன் பூஜ்யம்! மஞ்சுவிரட்டில் மாடு தப்பித்து ஓடிவிடுவதைப்போல், உழைப்பு தப்பிவிடுகிறது. உறுபயனும் கைக்குக் கிட்டவில்லை!


இறைவா, இந்த இரங்கத்தக்க நிலையிலிருந்து என்னைக் காப்பாற்று! நான் முழுமையாக உழைப்பின் வசத்தில் நின்று உழைத்திட அருள் செய்க, கூட்டாளிகளின் பலத்தை நம்பி நடைப் பிணமாகாமல் வெற்றிகள் பொருந்திய உழைப்பினை ஏற்றுக் கொள்ள அருள் செய்க! என் வாழ்க்கையின் குறிக்கோள் உழைப்பு. என் வாழ்க்கை இயங்குதல் உழைப்பையே ஊர்தியாகக் கொண்டதாய் விளங்க அருள் செய்க! உழைப்பில் இன்பம் காணும் இனிய பேற்றினை அருள் செய்க!