பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



38

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஜனவரி 22


அதிர்ஷ்டம் ஒரு குருட்டுப் போக்கு!


இறைவா, இன்று காலை நாட்காட்டியைப் பார்த்தேன்! "அதிர்ஷ்ட நாள்" - என்றிருந்தது! இறைவா, நான் அதிர்ஷ்டத்தை நம்பத் தயாராக இல்லை! இறைவா! எனக்கு உன் கருணைதான் தேவை! நின்னருள் எனக்கு நரகத்தையே கொடுத்தாலும் நான் மறுக்க மாடடேன்! உவப்போடு ஏற்பேன்! நின் அருள் பெருக்கு! அதுவே என் அதிர்ஷ்டம் ! இறைவா, அதிர்ஷ்டம் ஒரு குருட்டுப் போக்கு! அதிர்ஷ்டம் பலருக்கும் பலவற்றைத் தருகிறது! ஆனால், யாருக்கும் மனநிறைவளிக்கத் தக்க வகையில் தருவதில்லை! அதனால் பயன் இல்லை.

இறைவா, நீயே எனக்கு அருள் செய்க! நான் வேண்டுவனவெல்லாம் ஒருங்கு ஈந்தருள் செய்க! பொன்வேண்டும் பொருள் வேண்டும் இன்பம் வேண்டும்! நின்னருள் வேண்டும்! உன்னை என்றும் மறவாமை வேண்டும்! நான் மறந்தாலும் நீ என்னை மறவாமை, வேண்டும்!

இறைவா, அருள் செய்க! பொன்னாய், மணியாய், பெண்ணாய் இருந்தருளி, போகத்தைத் துய்ப்பித்து அருள் செய்க! பின் துணையாயிருந்தும் என் நெஞ்சத்தைத் துறப்பித்தும் ஆட்கொண்டருள் செய்க!