பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட் சிந்தனை

39



ஜனவரி 23


உழைப்பால் வாழும் வாழ்க்கையை அருளுக!


இறைவா, நினைப்பவர் மனம் கோயிலாகக் கொள்ளும் இறைவா! நீ, எனக்குச் சாட்சி! இறைவா, நீ என் மனத்துக்குச் சாட்சியாக இருக்கிறாய்! இறைவா! நான் பலவீனமடைந்து கொண்டே வருகிறேன்! அதனால் பயப்படுகிறேன்!

இறைவா, நான், என் பயத்தின் காரணமாக உன்னை அண்டிப் பிச்சை கேட்கிறேன்! விதி விலக்குக் கேட்கிறேன்! சலுகை கேட்கிறேன்! என்பால் இரக்கம் காட்டு என்று இறைஞ்சுகிறேன்! இறைவா, என்பால் இரக்கம் காட்டாதே! எனக்குச் சலுகைகள் வேண்டாம்! வாழ்வு உரிமைகளைத் தந்து அருள் செய்க! எனக்கு விதிவிலக்கு அளிக்காதே! நான் விதி-நெறிவழியே வாழ முயற்சி செய்வேன்!

சிறுதுாறல்களால் பயிர் வளர்ந்து விடாது! அது போல நான் சலுகையால் வளர்ந்து வாழ்ந்து விட முடியாது. எனக்கு உரிமைகளே வேண்டும். பயமற்ற வாழ்க்கையே வேண்டும்! நான் உழைத்தே உண்ண வேண்டும்!

நான் மனச்சாட்சி உணர்த்தும் வழியில் நடக்க வேண்டும்! அருள் செய்க! உரிமை நிறைந்த வாழ்க்கையை அருள் செய்க! உழைப்பால் வாழும் வாழ்க்கையை அருள் செய்க மனச்சாட்சியின் படி வாழும் நன்னெறியில் நிறுத்திடுக.