பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



40

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஜனவரி 24


பணி செய்து கிடக்கும் பாங்கினை அருள்க!


இறைவா! உயிராவணம் இருந்து உற்று நோக்கி, உள்ளக் கிழியில் உரு எழுதியோர்க்கு அருளும் உத்தமனே! என் வாழ்க்கையில் உயிர் ஆவணம் இல்லை. நான் உயிருக்கு ஊதியம் தேடும் நிலையில் இல்லை. எனது உடம்பு என்னை ஆட்டிப் படைக்கிறது. உடம்புக்கு உணவும் மருந்தும் தேடுவதிலேயே பொழுது கழிகிறது. போதும் போதாதற்குக் காமம் வேறு இறைவா! ஏன் இந்த அவலநிலை! நான் எழுச்சி வசப்படுகிறேன்!

அப்பப்ப, ஒரே உணர்ச்சி மயம்! ஆனால் எனக்கு; என்னைப்பற்றி நான் எப்படி ஆளாக வேண்டும் என்ற கற்பனைகூட இல்லை! இறைவா, அதனால் எனக்கு இப்படியொரு கற்பனை செய்யக் கற்றுத் தா!

இறைவா, நான் இந்த கற்பனையில் திளைத்து என்னை உருவாக்கிக் கொள்ளும்படி அருள் செய்க! ஆம் இறைவா! எனக்கு நீ நாள்தோறும் படிக்காசு தருதல் வேண்டும். இது எனது கற்பனை! ஆம் இறைவா, நான் அப்பரடிகளைப் போல், கைத்திருத்தொண்டு செய்ய வேண்டும்! உழைப்பால் உருவாகும் பணிகள் செய்யவேண்டும்! திருக்கோயில் திருத்தொண்டு செய்ய வேண்டும்! தெருவெல்லாம் கூட்டித் துப்புரவு செய்ய வேண்டும்! இறைவா, நான் தொண்டனாக வாழ அருள் செய்க! பணி செய்து கிடக்கும் பாங்கினைத் தந்தருள் செய்க! படிக்காசும் அருளுக!