பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



46

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஜனவரி 30


அருள் நெறி வாழ்க்கையினை அருளுக!


இறைவா, அண்ணல் காந்தியடிகள் பிறந்தார்! இறந்தார் என்று கூறலாமா? காந்தியடிகள் இறந்து விட்டார் என்பது வரலாற்றுப் போக்கில் சரி! ஆனால் அவர் இறக்கவில்லை! அவர் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்! ஆம்! மானுட சாதிக்குச் சுதந்தர உணர்வு இருக்கும்வரையில் காந்தியடிகள் வாழ்வார். அகிம்சை அதாவது யாரையும் துன்புறுத்தாது வாழ்தல் என்ற உயரிய கொள்கை, உலகம் தழுவிய கொள்கையாக விளங்கும் வரையிலும் வாழ்வார். சத்தியம்- உண்மை நிலவும் காலம் வரையிலும் வாழ்வார். இறைவா, எனக்கும் ஆசை! நான் மனிதசமுதாய வரலாற்றில் இழுத்தெறியப்படக் கூடாது! நான் அடுத்த தலைமுறையினருக்குக் "குருபூசை", "திதிப்" பொருளாக மட்டும் போய் விடக்கூடாது!

நான், மற்றவர் மறவா வண்ணம் என்றும் நிலைத்து வாழ வேண்டும். அதற்குரிய விலையாகிய நன்மையை எண்ணுதல் வேண்டும்; நன்மையைச் செய்தல் வேண்டும். ஓயாது உழைத்த மனிதகுலத்துக்குரிய நன்மையைச் செய்தல் வேண்டும். அதற்கு நானே நன்மையின் மொத்த வடிவமாக மாறி ஒழுகுதல் வேண்டும். நன்மைக்கு வரும் இடையூறுகளை நான் தாங்கிக் கொண்டு நன்மையைக் காப்பாற்ற வேண்டும்! இறைவா, இந்த நன்மை பெருக அருள்நெறி சார்ந்த வாழ்க்கையை அருள் செய்க!