பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருமடங்களில் பணிவிடை செய்தவர்களுக்குக் கூட அந்த அளவுக்குச் சித்தாந்தச் செந்நெறி ஆர்வம் இருந்தது.

திருமடங்களில் பணி செய்தவர்கள் தீக்கை பெற்றே இருந்தனர். பல பணியாளர், அலுவலர்கள் சிவபூசையே செய்திருக்கின்றனர். இன்றைய நிலை என்ன? திருமடங்களில் துறவிகள் எண்ணிக்கை பெருக வேண்டும். அவர்களுக்குக் கல்வியும் ஞானமும் வேண்டும் என்று திருவுள்ளம் பற்றிய தருமபுரம் ஆதீனத்தில் 25ஆவது மகாசந்நிதானமாக அருளாட்சி செய்த கயிலைக்குருமணி அவர்கள் செந்தமிழ்க் கல்லூரி கண்டு, திருமடத்தின் துறவிகளைத் தமிழ்த்துறையில் பயிற்றுவித்தார்கள். சித்தாந்த சாத்திர வகுப்புகளை நடத்தித் தத்துவப் பயிற்சியைக் கொடுத்தார்கள். அவர்களே வாய்ப்பு நேரிடும் பொழுதெல்லாம் சிறந்த உரையாடல்கள் மூலமும் ஞானசாத்திர உண்மைகளைப் புலப்படுத்தினார்கள்

திருமடங்களின் வரலாற்றில் மீண்டும் கற்றறிந்த துறவிகளைக் கொண்டு வரவும், பணிகளில் ஈடுபடுத்தவும் தருமபுர ஆதீனம் முன்வந்த வரலாற்று நிகழ்வு, ஒரு சமய மறுமலர்ச்சிக் காலம். இன்றைய இளைய தலைமுறை, இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இந்தச் சமய மறுமலர்ச்சியை எளிதில் மறக்காது.

பொதுவாக திருமடங்களின் பணிநிலைகள் மன நிறைவைத் தரத்தக்கன என்று கூறமுடியாது. புறச்சமயங்களின் வளர்ச்சியும், சமயச் சார்பற்ற அரசின் தோற்றமும் திருமடங்க்ளின் முன்னால் பல்வேறு பணிகளை வைத்துள்ளன; அறைகூவல்களை வைத்துள்ளன. அவைகளைச் சந்திக்கக் கூடிய சக்தியை நமது சைவத் திருமடங்கள் பெற்றாக வேண்டும். சைவத் திருமடங்கள் பொருள், வாய்ப்பு, பெருமை இவற்றின் காரணமாகத் தம்முள் முரணி நிற்கும் நிலை அறவே மாற வேண்டும்.