பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

434

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆகவே! இனங்களில் உயர்ந்து சிறந்து போற்றுதலுக் குள்ளாகியிருக்கும் மனித இனம் எண்ணிச் சிந்தித்து அருளார்ந்த வாழ்வுவாழ வேட்கை கொள்ளவேண்டும். அன்பு வாழ்வுக்கும் அறவாழ்வுக்கும் வழிவகுத்துத்தர வழிபாடு சாலச் சிறந்தது. வழிபாட்டின் மூலம் அமைதியையும் பேரின்பப் பேற்றையும் பெற்று மனிதரில் மாணிக்கங்களாகத் திகழமுடியும். உலக உத்தமர் காந்தியடிகள்கூட வழிபாட்டினாலும் வழிபாட்டை ஒட்டிய சிந்தனைகளினாலும் சிறப்புற்றார்.

உலகியலில் சிந்தனைக்கு வித்திடக் கூடிய சிரிப்புகளை அனுபவித்து ஆன்ம நேயத் தொண்டுகளைச் செய்ய முனைய வேண்டும். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பு நம் தமிழினத்துக்குப் பழமையானது. அது தொன்றுதொட்டு வழி வழி வந்த ஒரு தன்னிகரற்ற தத்துவம். அந்தத் தத்துவத்துக்கு மதிப்பளித்து, என்றும் அன்பாய் இன்பமாய் வாழ வாழ்த்தி விடைபெறுகிறோம். வணக்கம்.


யாழ்ப்பாணத்தில்


சமய வரலாறுகளைப் பலர் பலவிதமாகப் பார்க்கிறார்கள். வாழ்வுக்கு நெறியைக் காட்ட வேண்டிய சமய அமைப்புகள் தளர்ந்ததாலும், சோம்பியதாலும் ஒருவித மயக்கம் உண்டாகியிருக்கிறது. ஆண்டவன் அருள் பாடும் இன்றைய ஆத்திகர்கள் சிலரிடமிருந்து சமயத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டம் வந்திருக்கிறது. சமயத்தைப் பற்றிய ஐயப்பாடு நமது சமுதாயத்தில் எப்படி எழுந்தது என்பதைச் சிந்திக்க வேண்டும். சமயச் சார்புடைய புராணங்கள் எத்தகைய நோக்கத்தோடு தோன்றின என்பதையும் எண்ண வேண்டும். இத்தகைய சிந்தனைகளினாலும், எண்ணங்களினாலும் முடிவான கருத்தொன்று பிறக்க வழியுண்டு. அந்த முடிவான கருத்தின் வழி சமயச் சார்புடைய சமுதாயத்தைப் படைக்க உழைக்க வேண்டும்.