பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஈழத்துச் சொற்பொழிவுகள்

437


கூடாதெனக் கருதியே, ஞானசம்பந்தர் தமிழர் நாகரிகம் காக்கப் புறப்பட்டார். தமிழர் நாகரிகம் பேணப்பட வேண்டியே சம்பந்தர் சணர்களோடு வாதிட்டார்-வென்றார். இந்த வாதத்தைச் சமயச் சண்டையாக எண்ணி விடுதல் கூடாது. சண்டைவேறு பாதுகாக்க எடுக்கும் முயற்சி வேறு. இயற்கையோடியைந்த வாழ்வைத் தொல்காப்பியம் கூறுகின்றது. தமிழர்கள் வாழ்வு இயற்கையோடியைந்தது. இந்த இயற்கை வாழ்வைச் சமணர்கள் மாற்றியமைக்க எத்தனித்தனர். அப்போதுதான் அப்பரும் சம்பந்தரும் ஒரு நிலைமை மாற்றத்தைக் கொணர விழைந்தனர். பண்ணோடு இசை கேளாத சமணர்களின் போக்கை மாற்றியமைக்கும் பொறுப்பு சம்பந்தருக்குக் கிடைத்தது. சமணர்கள் மலரிடை மணம் நுகரார் என்றனர். அப்பரும் சம்பந்தரும் இதற்கொரு மாற்றத்தைத் தேட வேண்டியிருந்தது. சம்பந்தர் தாம் பாடும் தேவாரங்களில் இயற்கையைப்பற்றி எடுத்தியம்பினார். மேல்நாட்டுக் கவிஞர்தான் இயற்கையை வர்ணித்துப் பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள் எனக் கருதுபவர்கள் சம்பந்தர் திருப்பாடல்களை ஒரு முறை படித்து இன்புறுவார்களாக.

சமண-புத்த சமயத்தவர்கள் பெண்மைக்கு மதிப்பளிக்காதவர்கள்-தெளிவாகச் சொன்னால் பெண்ணினத்தை வெறுத்தவர்கள். இந்நிலையிலேதான் ஞானசம்பந்தர் பெண்ணினத்தைப் போற்ற முற்பட்டு இறைவனைப் பெண்ணோடு தொடர்புபடுத்திப்பாடினார். முதலில் பாடியருளிய தேவாரத்திலேயே “தோடுடைய செவியன்” எனப் பாடியிருக்கிறார். “பெண்ணினல்லாளொடும் பெருந்தகை யிருந்ததே!” என்றார். மாதொரு பாகனாக நமது மகேஸ் வரனைக்காட்டிப் பெண்ணைப் பெருமைக் குரியவளாக்கினார், சம்பந்தர்.

சமுதாயம் கோவில்தொண்டைப் புறக்கணித்த போது சேக்கிழார் கோவில் தொண்டை வலியுறுத்திப் பாடினார். மனையில் வாழ்ந்த மாதர்களைப் பாடினார். திருவருளை