பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அங்கயற்கண் அம்மைக்குச் சொத்துரிமையும் ஆட்சியுரிமையும் வழங்கிய சைவத்தின் மாண்பினைக் காண்க

திருஞானசம்பந்தர், அயல் வழக்கை மறுத்து வழக்காடியது இயற்கையோடிசைந்த நமது சமய மரபுகள் பாழ்படுமே என்ற கவலையினாலேயாம். எளிதில் ஏற்று வாழ இயலாத அயல் வழக்குகள் தமிழகத்தில் நிலவிய வாழ்க்கையமைப்பை நிலை குலையச் செய்தன. அதனால், திருஞான சம்பந்தர் இயற்கையோடிசைந்த வாழ்க்கையை வலியுறுத்தவே விரும்பினார் என்பதை அவருடைய திருமுறைகளில் இயற்கை வருணனை நிரம்பிக் கிடப்பதாலும், அவை முற்றாக இசைத் தமிழாக விளங்குவதாலும், அம்மையப்பனையே பரவிப் பாராட்டுவதாலும் உறுதிப்படுகிறது. சேக்கிழாரின் பெரியபுராணத்தில், உற்ற அமைச்சராகவும், துணிவுமிக்க செயல்களுக்குத் துணைவராகவும் இழுக்கல் ஏற்படும்போது இடித்துத்திருத்தும் ஆசிரியராகவும் முறையே விளங்கிய பெண்பாலாரைப் பார்க்கிறோம். மார்க்சியமும் மானிட வர்க்கத்தில் ஆண், பெண்ணிடையே ஏற்றத் தாழ்வுகளை அங்கீகரிப்பதில்லை. இத்துறையில் இவ்விரு தத்துவ இயல்களும் ஒத்தே நிற்கின்றன.

உண்மை நீதியை உணர்த்தும் தத்துவங்கள்

மனித நாகரிகத்தின் மையம் நீதியேயாம். இன்று நம்முடைய சமுதாயத்தில் நீதி என்ற சொல் கொச்சைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுவும் சமூக நீதி பற்றி நமக்குக் கவலையே இல்லை. கடவுளின் மறு பெயரே “நீதி” என்கிறார், மாணிக்கவாசகர்,

“நீதியே செல்வத் திருப்பெருந்துறையில்
நிறைமலர்க் குருந்தம் மேவிய சீர் ஆதியே”40

என்பது திருவாசகம்.

கச்சியப்பர் ‘சைவ நீதி’ என்று போற்றுவார்.