பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தன்னிறைவுடையனவாயிருந்தன. அன்றாட வாழ்க்கையில் அரசின் குறுக்கீடுகள் இல்லை. அரசுகள் பொது ஒழுங்கு, படைப்பாதுகாப்பு மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தன. அது மட்டுமின்றித் தமிழ்நாட்டு அரசுகள் முறை செய்து காப்பாற்றும் அரசுகளாக இருந்தமையினால் அரசைப்பற்றி அன்றாடம் எண்ணிப் பேசவேண்டிய சூழ்நிலை அன்று இல்லை. இன்றோ, அரசுகள் வளர்ந்து, அதிகாரத்தைப் பெருக்கிப் பெருக்கித் தனி மனிதனுடைய் வாழ்க்கையில் கூட அரசின் அதிகார வீச்சு தலை காட்டுகிறது. அதுவும் நம்முடைய நாட்டில் உள்ளார்ந்த செழுமை பெறாத மக்களாட்சி முறையும், சீர்மைப்படுத்தப்படாத சமுதாய அமைப்பும் அரசின் அதிகாரப்பிடிப்பையே வலிமைப் படுத்தியுள்ளன. மக்களின் வலிமை முடம்பட்டே போகின்றது. இது வளரும் நாட்டுக்கு நல்லதன்று. தனி மனித வாழ்க்கையில் அரசு குறுக்கிட்டபொழுதெல்லாம் நமது சமய ஆசிரியன்மார்கள் கனன்று எழுந்து கடிந்துள்ளனர். அப்பரடிகள், பல்லவப் பேரரசன் மகேந்திரவர்மனின் ஆட்சியை எதிர்த்துப்பாடிய,

“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்,
நரகத்தில் இடர்ப்படோம் நடலையல்லோம்,
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்,
இன்பமே எந்நாளும் துன்ப மில்லை
தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாம்என்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே!”43

என்கிற பாடல் வரலாற்றுச் சிறப்புடையது. தமிழ்நாட்டில் முதன்முதலாகத் தனி மனிதர் வாழ்க்கையில் ஒரு அரசு தலையிட்ட வரலாறே இதுதான். அரசன், மூர்க்கத்தனமாகத்