பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அமையவேண்டும். பொருள்வளம் நிறைந்த வாழ்க்கையே வளம் நிறைந்த வாழ்க்கை. அதனால் ‘செய்க பொருளை’ என்ற திருக்குறளின் ஆணையை ஏற்று, ஊக்கம் உடையோராக ஆக்கத்திறனைத் தேடி அடைவோமாக. பொருள்வரும் வாயில்களைக் கண்டு, இயற்றி, ஈட்டி, காத்து, காத்த பொருளை முறையாக வகுத்துச் செலவிட்டு வாழ்வில் வளம் காண்போமாக.

நம்முடைய நாட்டு வாழ்க்கையில் ஊழ்த்தத்துவத்தைப் பற்றிய நம்பிக்கை நிலை பெற்றிருக்கிறது. ஊழ்த்தத்துவ நம்பிக்கையில் நன்மையும் விளைகிறது, தீமையும் விளைகிறது. ஒரே தத்துவத்தின் அடிப்படையில் நன்மையும் தீமையும் எப்படி விளைய முடியும்? இதற்குத் தத்துவம் காரணமல்ல. தத்துவத்தை நாம் அணுகும் முறையே காரணம். ஊழ், உயிரின் சிந்தனை, செயல்களின் வழிப்பட்ட வழக்கங்களின் வழி வருவது. உயிர் மேற்கொண்டொழுகிய வழக்கங்களின் சுவடுகள் உயிரிடத்தில் தங்கி, வாழ்நிலை தோறும் முகிழ்த்து வெளிப்படுவது ஊழ். ஊழ் மாற்றத் திற்குரியதேயாம். அறிவியல் ஆற்றலில் புத்துணர்வில் புதிய உழைப்பில் வளர்ச்சியடைந்து மாற்றங்களைப் பெற்று வரும் ஆன்மாவின் முன்னே நேற்றையப் பழக்கவழிப்பட்ட ஊழ் நிற்றல் அரிது. ஊழ் உருக்கொண்ட காலத்திலும் இன்று வாழும் காலம் வளர்ச்சித் தன்மையுடையது. நாள்தோறும் தேக்க நிலையில் கிடக்காமல் சிந்தனையில் செயலில் சிறந்து வளர்ந்துவரும் ஆன்மா ஊழினை வெற்றி கொள்ளும். நாள் தோறும் நாம் முயன்று செயற்படுவதன் மூலம் நல்லுழைப் படைக்க வேண்டும். புதிய முயற்சிகளின் மூலம் சென்ற கால இழவூழையும் கூட, ஆகூழாக மாற்ற வேண்டும். இத்தகு நம்பிக்கையும் முயற்சியுமே வளம் சிறந்த வாழ்க்கைக்குத் துணை செய்ய முடியும்.

இங்ஙனமின்றி ஊழ் மாற்ற இயலாதது; நாம் இப்படியேதான் இந்தத் துன்பத்தைத் தூக்கிச் சுமக்க