பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

205



இந்திய நாடு சமயச் சார்பற்ற நாடு. இந்த நாட்டில் மத நம்பிக்கையுடைவர்கள்கூட, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலுமே மதப்பற்றைக் காட்டவேண்டும். நாடு தழுவிய வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளும்போது, தம் மதத்தவர் அல்லாத மற்ற மதத்தினரிடம் வெறுப்போ, பகையோ காட்டுவது மதச்சார்பற்ற நாட்டின் இலக் கணத்திற்கு மாறாகிவிடும். ஆதலால் எந்த ஒரு மதப் பிரிவினரும் மற்ற மதங்களை இழிவுபடுத்துவது மத மாற்றங்களைத் தூண்டுவது ஆகியவற்றைச் செய்யக்கூடாது என்று கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். அப்படி மத நிறுவனங்கள் தம்மைத் தாமே கட்டுப்படுத்திக் கொள்ளத் தவறினால் அரசு மத மாற்றங்கள் அறிவுத்தெளிவின் அடிப்படையில் நிகழத்தக்கனவாகவும் விரும்பத்தகாத வகையில் மத மாற்றம் நிகழ்வதைத் தடுப்பதாகவும் சட்டங்களை இயற்றிக் கட்டுப்படுத்த வேண்டும்.

மத நிறுவனங்களில் இந்து மத நிறுவனங்களின் பொருளாதாரம், வரவு, செலவு ஆகியன மட்டுமே அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கின்றன. மற்ற மத நிறுவனங்கள் எத்தகையதொரு கட்டுப்பாட்டையும் பெறவில்லை. அதன் காரணமாக அந்த மத நிறுவனங்கள் தங்களுடைய பொருளாதார வசதிகளைப் பல்வேறு வழிகளில் பெறவும் தாம் விரும்பியவாறெல்லாம் செலவு செய்யவும் உரிமை பெற்றுள்ளன. இந்த உரிமைகளே மத மாற்றங்களுக்குப் பெரும் தூண்டுதல்களாக அமைகின்றன. ஆதலால் எல்லா மத நிறுவனங்களுக்கும் ஒத்த ஒரே மாதிரியான சட்டங்களை இயற்றித் தவறுகள் நிகழாதபடி பாதுகாக்கவேண்டும் இங்ஙனம் பல முனைகளில் திட்டமிட்டுச் செயற்பட்டால் தான் மதமாற்றங்களைத் தவிர்க்கலாம்; மக்களையும் காப்பாற்றலாம். நாட்டையும் காப்பாற்றலாம்.

—"மக்கள் சிந்தனை"-1-8-81