பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

290

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இன்பப் பேற்றை நமக்கு அளித்த அருள்நெறித் திருக்கூட்டத் தொண்டர்களுக்கு நமது நெஞ்சம் கலந்த வாழ்த்து.

தமிழகம் தெய்வ மணம் கமழும் திருநாடு. இறை மணம் கமழும் இன்பத் திருநாடு, சாத்திரத்திலும் உயர் ஞானத்திலும் சிறந்து விளங்கும் பெருமை செந்தமிழ் நாட்டிற்கே உரியது. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி அன்று தொட்டே அவர்களது வாழ்க்கையில் சமய வாழ்வு இடம்பெற்றிருந்தது. அறிவுக் கண் கொண்டு இப் பரந்துபட்ட உலகியலைக் காண்கின்ற பேறுபெற்ற பொழுது-அகலமும் ஆழமும் அளவிடப் பெறாத நீலத் திரைக் கடல்-காலம் தவறினும் தான் தவறாது எழுந்து நல்லொளி பரப்பி ஞாலத்தை வாழ்விக்கும் ஞாயிறு - வானுயர் தோற்றமென்ன மலை இவை போன்ற இயற்கையின் மதிப்பிட முடியாத அமைப்புகளைக் கண்டு வியந்தனர். உலகியலில் ஓர் ஒழுங்கு ஒரு முறைபிறழாத நிகழ்ச்சி முதலியன அமைந்து கிடப்பதனைக் கண்டனர். இத்தகு அமைதிகளைக் கண்டு இவை தம்மை அமைத்துக் கொடுப்பதற்குரியது மனித எல்லைக்கும் அப்பாற்பட்டது என்று உணர்ந்தனர். அந்த ஒன்று பேரறிவும், பேராற்றலும் உடையது என்ற முடிவுக்கு வந்தனர். அப்பொருள் அப்பாலுக்கப்பாலாய் இருந்தும் ஊனாகவும், உயிராகவும், உயிர்ப்பாகவும் இருப்பதை உணர்ந்தனர். இத்தகு நிலையில் காட்சியளிக்கின்ற அந்தப் பொருளை எங்ஙனம் சிற்றறிவுடைய உயிர்கள் வாழ்த்த முடியும். இதனை நமது மணிவாசகப் பெருமானார்,

“வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றயை என்சொல்லி வாழ்த்துவனே.”

என்று அருளிய திருப்பாடலால் அறியலாம்.