பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

311


செய்யும்; துன்பமும் செய்யும். சந்தர்ப்பம் பார்த்து, இப் பொறிகள் நம்மைத் துன்பப்படுத்தும்.

நம் பொறிகளைப் பக்குவப்படுத்துமுன் நம்மை அறிதல் வேண்டும். நம்மை இயக்கும் தலைவனை அறிதல் வேண்டும். மனிதன் தன்னை அறிய முடியாத நிலையில் இருக்கிறான். “இருகை யானையை ஒத்திருந்தது என் உள்ளக் கருவை யான் கண்டிலேன் கண்டது எவ்வமே” என்றார் மணிவாசகர். யானை தன் உருவைத் திரும்பிப் பார்க்க இயலாதது. நாமும் அப்படித்தான் இருக்கிறோம். அது மட்டுமன்றி யானை தன்னைச் செலுத்தும் பாகனையும் உணராது. நாமும் அவ்வாறே. நான் யார்? என் உள்ளம் யார்? என்று மணிவாசகர் அறிந்தாற்போல் அறிதல் வேண்டும். “மக்களே போல்வர் கயவர்” என்றார் திருவள்ளுவர். நாம் மனித உருவில் விலங்குகளாக வாழ்கிறோம். நம் வாழ்வைத் திரும்பிப் பார்த்தல் வேண்டும்.

நாம் அறியாமையில் இருக்கிறோம்; இருளில் இருக்கிறோம் என்று அறிந்தால். அறிவு தேவை; ஒளி தேவை என்ற உணர்வு தோன்றும்; நோயை அறிந்தவனுக்கு மருந்து தேவை என்ற உணர்வு தோன்றுவது போல, இந்த உணர்வு தோன்றியபோதே மனிதனுக்குச் சமய வாழ்வின் தேவையும் அருமையும் புலப்படுகின்றன. இந்த உணர்வு நிலைத்திருக்க வேண்டும். இந்த உணர்வு தோன்றிய பின்னரும் சிலர் பழைய விலங்கு நிலைக்குத் திரும்பி விடுவதுண்டு. இதில் மிக விழிப்பாக இருந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்.

நாம் பிறர்க்குத் துன்பம் செய்யாதிருந்தால் பிறர் நமக்குத் துன்பம் செய்யார். அதுவே சமய வாழ்வின் அடிப்படை. உலகில் துன்பத்தை எதிர்த்துப் போரிட மனிதன் கண்ட நெறி சமயநெறி, சமய நெறியில் நின்று வாழ்வை ஒழுங்குபடுத்திக் கொண்டால் துன்பம் வராது.