பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

27


துணை செய்தது. அது போலவே நாதசுர இசையும் வளர்ந்தது; மனித குலத்தையும் வளர்த்தது. மக்கள் பாட்டில், இசையில் எளிதாக ஈடுபட வாய்ப்பிருந்த பொழுது “வேந்தலைக்கும் கொல் குறும்புகள்” இருந்ததில்லை; வன்முறை இருந்ததில்லை; வன்கண்மையும் கூட இருந்ததில்லை. இறைவன், ஏழிசையாய் இசையின் பயனாய் விளங்குகின்றான் என்பது தமிழர் முடிவு. இசையினாலேயே இறைவனை வழிபட்டனர். தமிழோடு இசைபாடி நெஞ்சு நெகிழ்ந்து நின்றுருகி வழிபட்டனர். ஆதலால் திருக்கோயில் சமுதாயத்திற்கு மிக இன்றியமையாததாகிய கலைநலம் தரும் கலைபயில் கூடமாக விளங்கியது.

மருத்துவச் சாலை

மானிட வாழ்க்கை இனிதே அமைவதற்கு மருத்துவமும், தேவை. திருக்கோயிலைச் சார்ந்த வாழ்க்கை முறையில் மருத்துவம் சிறந்த முறையில் விளங்கியிருக்கிறது. திருக்கோயில் தத்துவத்தைக் கண்டவர்கள் சித்தர்கள். புறத்தே திருக்கோயிலைக் கண்ட சித்தர்கள் ஊனுடம்பாம் திருக்கோயிலையும் பேண, சித்த மருத்துவம் கண்டார்கள். சித்த மருத்துவத் துறையில் நோய் வராமைக்குரிய முற்காப்பு நெறிகளும் உண்டு. நோய் வந்தபின் செய்தற்குரிய மருத்துவமும் உண்டு. ஏன்? இறைவனே மருந்தாகவும், மருத்துவனாகவும் நின்று அருள் செய்பவன். எனவே எண்ணற்ற நோய்களை நீக்கி, “மருந்தீசன்” என்றும், “வைத்தியநாதன்” என்றும் பெயர் பெற்று விளங்குகின்றான். திருக்கோயில் வளாகத்தில் சிறந்த மருத்துவச் சாலைகள் இருந்தன.

திருவாவடுதுறையில் ஒரு வைத்தியக் கல்லூரி இருந்தது என்று விக்கிரம சோழன் கல்வெட்டுக் (கி.பி. 1131) கூறுகிறது. “சங்கரதேவியின் அறச்சாலை” என்ற உணவுச் சாலையில், உணவு அளிக்கப் பெற்றவர்களில் வைத்தியக் கல்லூரி மாணவர்களும் இருந்தனர். “முந்நூற்று அறுபத்து நால்வன்