பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



நீதி சபை

மானிட வாழ்க்கையென்பது பிரச்சனைகளுக்கு உரியதுதான். பிரச்சனைகளே இல்லாத வாழ்க்கை சாரமற்றது; சுவையற்றது. ஆனால், வாழ்க்கையில் பிரச்னைகளைச் சந்திக்கின்றபொழுது மனிதன் நிதானமாக நின்று சிந்திக்கத் தவறக்கூடாது, அறிவை இழந்துவிடக் கூடாது; ஆத்திரப்படக்கூடாது. எந்தச் சூழ்நிலையிலும் வாழ்க்கையின் செயற்பாடுகள் நீதியோடு தொடர்புடையனவாக அமைதல் வேண்டும். நமது சமயமே “நீதி"யென்று பெயர் பெற்றது. மாணிக்கவாசகர் இறைவனை நீதியென்றே அழைப்பர்.

“பங்கயத் தயனுமால் அறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையில்
நிறைமலர்க் குருந்தமே வியசீர்
ஆதியே”

என்பது திருவாசகம். திருக்கோயிலை மையமாகக் கொண்டு நீதி விளங்கியது. திருக்கோயில்களில் நீதி வழங்கு சபைகள் இருந்தன. அந்தச் சபைகள் வழங்கிய நீதிகள் வரலாற்றுப் புகழுடையன. திருக்கோயில் தத்துவத்தில் கடவுளும் நீதிக்குக் கட்டுப்பட்டவர். கடவுளும் தனக்கு ஏதாவது வழக்கு இருப்பின் தானே அடாவடித்தனமாக அடித்துப் பிடுங்க முடியாது. உவமையில்லாத தலைவனும் கூடத் திருக்கோயிலில் விளங்கும் பஞ்சாயத்தார் முன்னே நீதி கேட்டு நிற்கத்தான் வேண்டும்! திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கும், நற்றமிழ்ச் சுந்தரருக்கும் இடையேயிருந்த வழக்கைக் கூறி, இறைவன் திருவெண்ணெய் நல்லூர்ப் பஞ்சாயத்தார் முன்னே நீதி கேட்டு நின்றமையை அறிக. அதுபோலவே செட்டிப் பெண்ணுக்கு நலம் செய்ய நினைத்த திருப்புறம்பியத்தில் எழுந்தருளியுள்ள இறைவன், திருக்கோயிலில் விளங்கிய நீதி சபையின் முன்னால் சாட்சி கூறி, உதவி செய்ததை ஓர்தல் வேண்டும். அதுபோலவே