பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வானொலியில்

423



இதயம், உணர்வில் பொங்கி வழியும்பொழுது கவிதை பிறக்கிறது. அருவி, உயர்ந்தது. அருவியிழிந்து வரும் மலை அதனினும் உயர்ந்தது. செஞ்சொற் கவிதை உயர்ந்தது; கவிதை பொழிந்திடும் கவிஞனின் நெஞ்சம் அதனினும் உயர்ந்தது. அவன் தரும் பாட்டினுள் கடவுள் தங்குகின்றான். அதனாலன்றோ அவனே, “அருச்சனை பாட்டேயாகும்” என்று கூறினான் சுந்தரரிடம்! “அருச்சனை செயல்! காகிதப்பூ பாட்டு, இயற்கை அப்பாட்டினுள் அவன் தங்கியிருக்கின்றான். பாட்டினைப் பாடுக! பாட்டுடைப் பொருளை உணர்க! மாணிக்கவாசகர் உணர்த்தியதைப் போல அவன் பாட்டுடைப் பொருளாக நிலவுவதை நினைந்து தொழுமின்!


அருள் நெறி வாழ்க்கை!

நமது தாய்மொழியில் நிறைய இலக்கியங்கள் உண்டு. புறத்தினை இலக்கியங்களும் உண்டு. அகத்திணை இலக்கியங்களும் உண்டு. இந்த இரண்டினையும் கடந்து வளர்ந்த அருள்திணை இலக்கியங்களாகிய பக்தி இலக்கியங்களும் உண்டு. கடவுள் நம்பிக்கையுடைய வராயிருப்பதும், அருள்நெறி வாழ்க்கை வாழ்வதும் எளியதொன்றல்ல.

விஞ்ஞானிக்குத் தேவையான அனைத்து ஆற்றல்களும்-அவ்வாற்றல்களோடு, மேலும் சிறந்த சீலமாகிய தவமும் தேவை. விஞ்ஞானத்தின் படைப்புக்கள் உலகியலை வளப்படுத்த மாறாது பயன்படுவன போலவே மனித இயலில் உள்ளங்களை மாறாது வளப்படுத்தப் பயன்பட வல்லவை மெய்ஞ்ஞானம். அதாவது பத்திமை வாழ்வு. ஆயினும் இன்று பத்திமை வாழ்வு அங்ஙனம் பயன்படாமையின் காரணமாக அதன் மீது ஐயங்கள் எழுந்துள்ளன. ஏன்? எதிர்க்களம் ஒன்றே தோன்றி வளர்ந்து வருகிறது.

அருளியல் வாழ்க்கை ஆற்றல் நிறைந்த வாழ்க்கை அறிவறிந்த ஆள்வினையுடைய வாழ்க்கை. அன்பில் தழைத்த