பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

424

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாழ்க்கை அச்சத்தை உதறிய வாழ்க்கை. தனியுணர்வு செத்த வாழ்க்கை. பொதுவில் பூத்த வாழ்க்கை. இந்த இலக்கணத்தோடு நமது அருளியல் வாழ்க்கை அமையுமானால் மறுப்பார் யார்? கதிரவன் உலாப்போதலை மறுப்பாரும் உண்டோ? வீசு தென்றலை மறுப்பாருண்டோ? இறைவனிடத்தை உலகத்திற்கு அப்பரடிகள் அறிமுகப்படுத்துகின்றார். கோட்டையென விளங்கும் கோயிலைக் காட்டியா? அழியாப்பசிக்குப் பயன்படும் அப்பத்தைக் காட்டியா? இல்லை! இல்லை! மாசில் வீணையைக் காட்டுகின்றார். இசைக்குரிய இசைவிக்கும் ஆற்றல் வேறு எதற்கு உண்டு! கடக் களிற்றையும் அடக்க வல்லது இசை.

மாலையில், மஞ்சள் வானத்தில் திங்கள்! வீசுதென்றல்! அடைந்துகிடக்க வீடுகட்டிய ஒருவன் அதனைக் கடந்து வெளியே வருகிறான். காவலோடு வெளியே உலாப் போகிறான். ஏன்? வீசுதென்றலை அனுபவிக்க! இன்பத்திற்கு எல்லையேயான இளவெயிலை வஞ்சனையிற்றிக் காழ்ப்புக் கலப்பின்றிக் கலகப் புகைச்சலின்றி அனுபவிக்க! ஆகா! என்ன இனிமை! வண்டுகள் பாடுகின்றன! தண்ணீர் தங்கிய பொய்கை! அதன் எல்லையில் இனிய காற்று! தண்ணளி தழுவிய காற்று! இத்தகு இன்பமயமானதாக இறையின் திருவடிகளைக் காட்டுகின்றார்.

“மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே!”

என்பது, அப்பர் திருப்பாட்டு.

இன்றைய சமுதாயத்தில் அருளியல் வாழ்க்கை இத்தகைய இன்பம் தழுவியதாக இருக்கிறதா? இன்று சமய வடிவம் தெரிகிறது. ஆனால் வாழ்க்கையைக் காணோம். ஆரவாரம் கேட்கிறது. ஆனால் அமைதியைக் காணோம்.