பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



24 மெய்கண்டார் விழா முதன்மையுரை


இந்திய வரலாற்றில் தத்துவ விசாரனை என்பது மிகத் தொன்மைக் காலத்திலிருந்தே வரும் ஓர் அறிவியல் பயிற்சி. தத்துவ சோதனை, தத்துவமசி என்ற வழக்குகள் இந்திய நாட்டின் வரலாற்றொடு இணைந்தவை. தத்துவம் என்றால் உள்பொருள் எனப்படும். உள்பொருள்களை, அவற்றின் உள்ளிட்டை, பரிணாமத்தை, பயன்பாட்டை உய்த்தறிந்து உணர்தல்தான் தத்துவ சோதனை. தமிழ்நாடு தத்துவத் துறையில் மெய்ப்பொருளறிவில் சிறந்திருந்தது. இந்திய மெய்ப் பொருள் நெறிகளில் எல்லாம் தமிழகத்தின் சித்தாந்தநெறி விழுமியது. ஐயங்களின்று நீங்கியது; நம்பிக்கைக்குரியது; வாழ்க்கைக்கிசைந்தது.

தமிழொடு பிறந்து வளர்ந்த நெறி சித்தாந்த நெறி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் மெய்கண்டார் இந்தச் சித்தாந்தச் சிவநெறி, மற்ற நெறிகளிலும் எவ்வாறு விழுமியது என்று அளவைகளால் நிலைநிறுத்தினார். ஆதலால், மெய்கண்டார் சைவ சித்தாந்தச் செந்நெறியைக் கண்டவர் அல்லர். மெய்கண்டார் சைவ சிந்ததாந்தத்தை சிவஞான போதம் என்ற ஞான நூல்வழி கட்டமைப்புச் செய்தார்.