பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

486

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஏனைய சமயங்களுக்கும் சைவத்திற்கும் உள்ள ஒரே வேறுபாடு சைவத்தில் எளிதில் ஊடுருவல் செய்ய இயலாது என்பதுதான். சிந்தையில் தெளிந்த ஞானிகளால் காணப் பெற்றது சிந்தாந்த சைவம். மூன்று பொருள்கள் என்றும் உள்ளவை. இந்த மூன்றாவன: இறை, உயிர், தளை என்பன. இந்த மூன்றனுள் இறையை இந்தியச் சமயங்கள் பலவும் உலகச் சமயங்களும் ஏற்றுக் கொள்ளும். ஆனால் சிந்தாந்தம் இறையின் இருப்பு, தொழில் முதலியவற்றை ஐயத்திற்கிடமின்றி விளக்குகிறது. இறை - கடவுள் ஒன்றே ஒன்றுதான். கடவுள் ஒருவரே. அவருக்கு உருவமில்லை. உருவம் இல்லாமலும் இல்லை. அவருக்கு ஊர் பெயர் கிடையாது. அதேபோழ்து ஊர், பெயர் இல்லாமலும் இல்லை, இயல்பாகக் கடவுளுக்கு உருவம் இல்லை. ஆட்கொண்டருள் செய்தலுக்காகக் கடவுள் அருவுருவ, உருவத்திருமேனிகளை எடுக்கின்றான். கடவுள் வரம்பிலாற்றல் உடையவன். ஆதலால், அவனால் எந்த உருவத்தையும் தன்னுடைய இயல்பாகிய பூரணத்துவத்திற்கு யாதொரு குறையும் வராமல் எடுக்க இயலும். கடவுள் மனம், வாக்குகளைக் கடந்தவர். ஆயினும் ஆன்மாக்களின் நலன் கருதி ஆன்மாக்கள் நடத்தும் வாழ்க்கையில் வழிநடைத் துணையாகப் பருவங்களில் பருவங்களுக்கிசைந்த பாத்திரப் பண்பில் நின்றருளிச் செய்யும் தனித்துணையாம் தன்மையை,

அப்பன்நீ அம்மைநீ அன்புடைய மாமனு மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ ஒருகுலமும்
சுற்றமும் ஓரூரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையாய்
என்நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன்நீ இம்மணி நீ இம்முத்து நீ! இறைவன்நீ
ஏறூர்ந்த செல்வன் நீயே!

என்று அப்பரடிகள் அருளிச் செய்துள்ளமையால் அறிக.