பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மெய்கண்டார் விழா முதன்மையுரை

487



முப்பொருள்களுள் அடுத்து இருப்பது ஆன்மா - உயிர். இந்தியத் தத்துவ ஞானங்களில் எல்லாம் சித்தாந்தச் செந்நெறியின் ‘ஆன்மா’க் கொள்கை தெளிவானது. ஆன்மாக்கள் பல; பலப்பல; ஆன்மாக்கள் படைக்கப்பட்டன அல்ல. ஆன்மாக்களுக்கு - உயிர்களுக்குத் தோற்றமும் இல்லை; அழிவும் இல்லை; ஆன்மாக்கள் கடவுளைப் போலவே என்றும் உள்ளவை. “என்று நீ அன்று நான்” என்பார் தாயுமானவர். ஆன்மாக்கள் என்றும் உள்ளவை யென்றால் இறைவனுக்கும் ஆன்மாவுக்கும் என்ன உறவு? கடவுளுக்குப் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்கள் ஏன்? இந்த ஐந்து தொழில்கள் யாரை முன்னிட்டு நிகழ்த்தப் பெறுகின்றன? கடவுள் ஆன்மாவின் வாழ்க்கைப் பயணம் தோறும் தேவைக்கேற்ப உறவுவைத்து ஆட்கொண்டருள்கின்றான். ஆன்மாக்கள் அறிவும் செயலும் முடங்கி ஆணவத்தினுடன் அறியாமையில் கட்டுண்டு கிடக்கும்போது தாயிற்சிறந்த தயாவுடன் உயிர்களுக்கு நுண்ணுடலையும், அறியாமை நீக்கத்திற்குரிய வாழ்நிலையில் - வாழ்ந்திட, துய்ப்பன துய்த்து உய்யுமாறு உய்தி பெறுதலுக்குரிய உடம்பினையும் பொருத்தல் படைப்பு. அறியாமை நீங்கும் காலம்வரை, பொருத்திய நுண்ணுடலை உயிர் தாங்கிப் பயன்பெறச் செய்தல் - பாதுகாத்தல். அறியாமைக்கு அரண் செய்யும் துரிசுகளை அழித்தல், உயிர் அதன் பழைய நிலையை உணராது மறைத்து வைத்தல், வாழ்க்கையில் வாழ்க்கையின் போகத்தில் ஆன்மாக்களுக்கு விருப்பத்தை உண்டாக்குதலும் மறைத்தல். ஆன்மாக்களை - உயிர்களை முற்றாக அறியாமையினின்றும் மீட்டு முழுமையுறச் செய்து இன்ப அன்பில் நிலைபெறச் செய்தல் அருளுதல். ஆன்மாக்களுக்கு கடவுள் வாழ்க்கையில் ஆண்டவன் அடிமையில்லை. உடையார் - இல்லார் இல்லை. பேதமில்லை. இதுவே உண்மையான சமயம். சித்தாந்தச் சமயம்.