பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

83



நமது சமய நூல்கள் கூறும் நான்மறைகள், ஆகமங்கள் ஆகியவை தமிழ் வழக்கிற்கு உடன்பட்டனவேயாம். அவைகள் இன்று வழக்கிற்குக் கிடைக்கவில்லை என்பது உண்மையாக இருக்கலாம். வடமொழிக்கு ஏற்றம் கொடுத்து நூல் செய்த மாதவச் சிவஞான முனிவரே, தமிழில் மறைகள் உண்டு என்பதனை ஏற்றுக்கொண்டு காஞ்சிப் புராணத்தில் அருளிச் செய்துள்ளார்.7 இக்கருத்தினையே திருமுறை கண்ட புராணமும் வலியுறுத்துகிறது.8 இதனைத் தொல்காப்பியம்9, புறநானூறு10, திருமுறைகள்11 முதலியனவும் வற்புறுத்துகின்றன. எனினும் சிவாகமக் கருத்துக்கள் தமிழ் நெறிக்கு முற்றிலும் புறம்பானவையாக இருத்தற்கில்லை. அவைகளை ஏற்புழி எடுத்துக் கொள்வதில் யாதொரு தடையும் இல்லை. சிவாகமங்கள் சிவபெருமானாலேயே அருளிச் செய்யப் பெற்றன என்ற கருத்தில் ஓரளவு உண்மையிருக்கிறது. சதாசிவ மூர்த்தி, கெளசியர், காசிபர், பாரத்வாசர், கெளதமர், அகத்தியர் ஆகியோர் ஐவருக்கும் சிவாகம நெறி உணர்த்தினார். பின் பல நூற்றாண்டுகள் அவை வழிவழி “எழுதாக்கிளவி”யாகவே விளங்கி கி.பி. 5-ஆம் நூற்றாண்டு அளவில்தான் வரிவடிவத்தைப் பெற்றன என்பது மொழி வரலாற்றறிஞர்கள் சொல்லும் கருத்து.12

ஆகமங்கள் அனைத்தும் ஒரே சமயத்தில் எழுதப்பெற்றன என்று கருதுதற்கு இடமில்லை. ஆகமங்களில் முன்னுக்குப் பின் முரணிருக்கிறது. அதனாலேயே, பல்வேறு காலங்களில் ஆகமங்கள் எழுதப் பெற்றிருக்க வேண்டும் என்று கருத வேண்டியிருக்கிறது. யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரும் ஆகமங்களில் முரணிருப்பதை எடுத்துக் காட்டுகிறார்.13 ஆதலால் ஆகமங்கள் இன்றுள்ள வடிவத்திலேயே சிவபெருமானால் அருளிச் செய்யப் பெற்றவை யென்பதும், அவை ஒரே காலத்தில் தோன்றியன என்பதும், என்றும் - ஒரே படித்தனவாக இருந்தன என்பதும் ஏற்றுக் கொள்ளப் பெற இயலாதன. திரிலோகசந்த சிவாசாரியார்