பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

113



காந்தியடிகள் பழைய பண்புகளுக்கும் நிகழவிருக்கும் புதுமைப் பண்பிற்கும் ஓர் இணைப்பு பாலத்தை ஏற்படுத்தினார். கங்கையும் யமுனையும் கலப்பதுபோல் பழமைக்கும்-புதுமைக்கும் இடையே வேறுபாடு தெரியாத விழுமிய ஒற்றுமையை உருவாக்கினார்; புதியதொரு சமுதாயத்தை உண்டாக்கினார்.

நம்மிடையே எப்படியோ ஒரு தனிமை உணர்ச்சி வளர்ந்து இருந்தது. அதன் காரணமாகப் பழக்கவழக்கங்களில் நாம் கூனிக்குறுகி வாழ்ந்தோம். அந்தக் கூனல் அந்நியர்கள் ஏறி உட்கார்ந்து சவாரி செய்வதற்கு வசதியாக இருந்தது. காந்தியடிகள் நமது கூனை நிமிர்த்தார். கத்தியை எடுத்துக் கொடுக்காமல்-இரத்தம் சிந்தும்படி செய்யாமல் நமது கூனை நிமிர்த்தினார். அதுவரை சுகமாக உட்கார்ந்து சவாரி செய்தவர்கள் சவாரி செய்ய முடியவில்லை-இறங்கி விட்டார்கள். இந்த அதிசயத்தைக் காந்தியடிகள் செய்து முடித்தார்.

எதையும் எப்படியும் செய்யலாம் என்று காந்தியடிகள் கருதியதில்லை. வாழ்க்கையின் இலட்சியம் உயர்ந்ததாக இருக்கவேண்டும். அந்த இலட்சியத்தை அடையும் வழிமுறையும் உயர்ந்ததாக இருக்கவேண்டும் என்பது காந்தியடிகளின் விழுமிய கொள்கை.

புதிய சமுதாய அமைப்புப் பற்றி அவர் கனவு கண்டார் என்று கூறுவதைவிட, எதிர்கால புதிய பாரதத்தை அவர் தரிசனம் செய்தார் என்று கூறுவதே சாலப் பொருத்தமானது. ஏனெனில் கனவுகள் நிறைவேறாமல் போவதும் உண்டல்லவா?

இந்த நாடு சுதந்திரம் பெற்றபோது எப்படி இருந்தது என்பது நாம் அறிந்த உண்மையே. வரைந்த வாழ்நாள் முழுதும் வாழமுடியாமல் இளமையிலேயே மரணமடைந்தோர் எண்ணிக்கை அதிகம். சமுதாயத்தில் ஏழைகளே அதிகமாக இருந்தார்கள். மனிதனை மனிதன் தொட்டால்